2016-ல் என்ன ஆச்சு? அதுதான் இப்பவும் நடக்கும்.. கருத்துகணிப்பு தவிடுபொடியாகும்.. ஜெயக்குமார் கணிப்பு
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 2-ம் தேதி எண்ணப்படுகிறது.
தமிழகத்தை அடுத்த 5 வருடங்களுக்கு ஆட்சி செய்யப்போவது யார்? என்பது அன்று தெரிந்து விடும்.

தி.மு.க வெற்றி பெறும்
இதற்கிடையே தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வெளியிட்ட பெரும்பாலான கருத்து கணிப்பில் தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும்(எக்ஸிட் போல்) திமுக வெற்றி பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இது கருத்து திணிப்பு
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இந்த கருத்து கணிப்பு தொடர்பாக நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- தேர்தலுக்கு பின்பு வெளியிட்டுள்ளது கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. கடந்த காலங்களில் இது போன்ற கருத்து கணிப்புகள் தவறான முடிவை தந்துள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் 2, 3, 5 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் இதுபோன்ற கருத்து கணிப்புகள் எப்படி சரியாக அமையும?

கணிப்பு பொய்யானது
இப்படித்தான் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டது. 124 தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியானது. அ.தி.மு.க. 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் என்ன நடந்தது? கருத்து கணிப்பு பொய்யானது.

இந்த முறையும் இதுதான்
அதேபோல 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அப்போதும் கருத்து கணிப்பு பொய்த்தது. அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனவே இந்த முறையும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications