5 முக்கிய விஷயம்.. டிரான்ஸ்பார்மர் ஊழல்.. தமிழக மின்சார வாரியத்திற்கு அறப்போர் இயக்கம் அதிரடி கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி வரும் அறப்போர் இயக்கம் ஐந்து முக்கியமான விஷயத்தை எழுப்பி உள்ளது.
டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் அமைச்சர் செந்தில்பாலாஜி முறைகேடு நிகழ்த்தியதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது. சுமார் 400 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்த தமிழ்நாடு மின்சார வாரியம். அண்மையில் விளக்கம் அளித்தது.

அந்த விளக்கத்தில் கூறியிருந்ததாவது: *மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், மேற்காணும் நிறுவனங்கள் உள்ளுரிலேயே பல வருடங்களாக இயங்கி வருவதால், அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் குறித்து தெரிய வாய்ப்புள்ளது
ஒப்பந்த விலைப்புள்ளிகள் அனைத்தும் கணினி மூலமாகவே பெறப்படுகிறது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்திருந்தாலும், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டம்-1998 (Tamil Nadu Tender Transparency Act 1998), விதி எண்.10(5)-ன்படி தமிழக மின்வாரியத்திற்குத் தேவையான மின்மாற்றிகளை தகுதி வாய்ந்த அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கும் பிரித்து வழங்கி மேற்படி விதிகளின் படி கொள்முதல் ஆணை அளிக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த இரு ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து ரூ.397.37 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது. புகாரில் மின்மாற்றிகளின் வேறுபட்ட விவரக் குறியீடுகளின் அடிப்படையிலும், வேறுபட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் உதாரணமாக காப்பர் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பிடு செய்யாமல் அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்துள்ளது. மேலும், கீழ்கண்ட காரணங்களினால் புகாரில் நிர்ணயம் செய்த விலையானது தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புகாரில் மின்மாற்றிகளின் விலையை கணிக்கும்போது அலுமினிய மின்சுருள் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விலையை அடிப்படையாக வைத்து, 25 சதவீதம் விலையை அதிகரித்து தாமிர மின்சுருள் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விலையோடு ஒப்பீடு செய்திருப்பது தவறானதாகும்.
அலுமினிய மின்சுருளை விட தாமிர மின்சுருள் விலை மூன்று மடங்கு அதிகமாகும். அலுமினியம் மின்சுருள் உபயோகிக்கும் மின்மாற்றிகளின் விவர குறியீடுகளும் காப்பர் மின்சுருள் உபயோகிக்கும் மின்மாற்றிகளின் விவர குறியீடுகளும் வெவ்வேறானவை. மேலும், இரு மின்மாற்றிகளின், ஆயுட்காலம், பழுது விகிதம் ஆகியவற்றை ஒப்பிடும்போது, காப்பர் மின்மாற்றிகளின் தரம் மிகவும் அதிகம் மற்றும் இதன் ஆயுட்காலம் 25 முதல் 30 ஆண்டுகள் வரை அதிகமான பழுதுகள் இன்றி இயங்கக்கூடியது.
புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகள் மூன்று வருடகால உத்திரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின்மாற்றிகள் ஐந்து வருடகால உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் உத்தரவாத காலம், பணம் செலுத்தும் கால அளவு, கொதிநிலை ஏற்புத் திறன் அளவு, காப்பர் மின்சுருள் அளவு போன்ற காரணிகளால், மற்ற மாநிலங்களில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் விலைகளோடு ஒப்பிட இயலாது. *மேலும், புகாரில் கூறியவாறு அனைத்து நிறுவனங்களும் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்தாலும், அந்நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, அந்நிறுவனங்கள் வழங்கிய விலைப்புள்ளியைக் காட்டிலும் தோராயமாக ரூ.50,000 வரை விலைகுறைப்பு செய்துதான் அந்நிறுவனங்களிடமிருந்து மின்மாற்றிகளை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. *அரசு, எந்த நிலையிலும், முறைகேடுகள் நடைபெறுவதை அனுமதிக்காது. ஆகவே, மின்மாற்றிகள் கொள்முதலில் புகாரில் கூறியவாறு எவ்வித முறைகேடுகளும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்தது.
அறப்போர் இயக்கத்தின் ஒப்பீடு சரியில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு பரிதாபமான பதிலை கொடுத்து சமாளிக்க முயற்சி செய்துள்ளார்கள். நாங்கள் தமிழ்நாட்டில் தரமான காப்பர் சுருளி பயன்படுத்துகிறோம். ஆனால் அறப்போர் இயக்கம் தரம் குறைந்த அலுமினியம் சுருளி பயன்படுத்தும்… pic.twitter.com/DS8OnA5TYL
— Arappor Iyakkam (@Arappor) July 11, 2023
இதற்கு அறப்போர் இயக்கம் பதில் அளித்துள்ளது. ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: "அறப்போர் இயக்கத்தின் ஒப்பீடு சரியில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு பரிதாபமான பதிலை கொடுத்து சமாளிக்க முயற்சி செய்துள்ளார்கள். நாங்கள் தமிழ்நாட்டில் தரமான காப்பர் சுருளி பயன்படுத்துகிறோம். ஆனால் அறப்போர் இயக்கம் தரம் குறைந்த அலுமினியம் சுருளி பயன்படுத்தும் டிரான்ஸ்பார்மர்கள் விலையுடன் ஒப்பிட்டு இருக்கிறார்கள் என்று மக்களை குழப்பி இருக்கிறார்கள்.
ஆகையால் அறப்போர் இயக்கத்தின் புகாரில் உள்ள விவரங்களை இங்கே மறுபடியும் நினைவுப்படுத்த விரும்புகிறோம். தமிழ்நாட்டில் காப்பர் சுருளி பயன்படுத்தும் 250 KVA டிரான்ஸ்பார்மர்கள் வாங்கிய விலையுடன் ராஜஸ்தானில் அதே மாதத்தில் அதே specificationகளுடன் கூடிய காப்பர் சுருளி பயன்படுத்தும் 315 KVA டிரான்ஸ்பார்மர்களின் குறைந்தபட்ச டெண்டர் விலையை ஒப்பிடுள்ளோம்.
இறுதி செய்யப்பட்ட விலை இதை விட குறைவு. ஆனால் வித்தியாசத்தை பாருங்கள். ஒரு டிரான்ஸ்பார்மருக்கு 1.81 லட்சம் கூடுதலாக கொடுத்து தமிழக மின்சார வாரியம் 2000 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கி இருக்கிறார்கள். இது போல் 10 டெண்டர்கள் ஆய்வு செய்ததில் அனைத்திலும் லட்சக்கணக்கில் அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 400 கோடி தமிழக அரசுக்கு இழப்பு.
ஆனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காரணம் யார்? இந்த இழப்பினால் லாபம் அடைந்தவர்கள் யார்? இந்த டெண்டர்களை கவனித்துக் கொள்ள தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த காசியை சட்ட விரோதமாக பணியில் இணைத்தது யார்?
அலுவலகம் வராமல் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று காசி தினமும் என்ன வேலை பார்த்தார்? இந்த முறைகேடுகள் நடந்து கொண்டிருந்த போது இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த ராஜேஷ் லக்கானி என்ன செய்து கொண்டிருந்தார்?
வழக்கு போட்டு விசாரணை நடத்தினால் தானே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்..! முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடுவாரா?" இவ்வாறு அறப்போர் இயக்கம் அறிக்கையில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications