பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாணவர்களின் சுயவிவரங்கள் விலைக்கு விற்பனையா? ஆடியோவால் அதிர்ச்சி
சென்னை: பள்ளி மாணவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண் போன்ற சுயவிவரங்கள் பள்ளிக்கல்வித்துறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் விலைக்கு விற்கப்படும் என்ற சமூகவலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோவை கேட்ட சைபர் கிரைம் போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம், சமூகவலைத்தளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக வெளியானது. அந்த ஆடியோ உரையாடலில், இருவர் பேசுகிறார்கள். கல்லூரி ஒன்றில் இருந்து நபர் ஒருவர், தரகர் ஒருவரிடம் பேசுவதாக அந்த ஆடியோ இருக்கிறது.
அந்த ஆடியோவின் விவரங்களை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் 10-வது மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் முகவரி, அவர்களை தொடர்பு கொள்ளும் செல்போன் எண் போன்ற சுயவிவரங்கள் தேவை என்று கல்லூரியில் இருந்து பேசுபவர் சொல்கிறார். 20 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் தேவை என்றும் அந்த நபர் கூறுகிறார்

5 ஆயிரம்
இதற்கு பதில் அளிக்கும் தரகர், 10-வது படிக்கும் மாணவர்களின் தகவலுக்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.3 ஆயிரம் தர வேண்டும். 12ம் வகுப்பு மாணவர்களின் தகவலுக்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் . இந்த பணத்தை ஆன்லைனில் அனுப்பி வைத்தால், அடுத்த 10-வது நிமிடம் மாணவர்களின் தகவல் உங்களுக்கு கிடைக்கும் என தரகர் கூறுவதாக ஆடியோ உள்ளது,.

புண்ணியகோடி
பள்ளிக்கல்வித்துறையில் கம்ப்யூட்டரில் பதிவுசெய்து வைத்திருக்கும் மாணவர்களின் சுயதகவல்கள் திருடப்பட்டு, விலைக்கு விற்பனை செய்யப்படுவது போன்று அந்த ஆடியோ வெளியாகி உள்ளதால் பள்ளி கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரி புண்ணியகோடி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சைபர் கிரைம்
அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, உடனடியாக உரிய விசாரணை நடத்த சைபர் கிரைம் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை கம்ப்யூட்டர் பிரிவு ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரணையை தொடங்க உள்ளனர். விரைவில் ஆடியோ உரையாடலில் பேசும் தரகர் யார் என்பதை கண்டுபிடித்துவிடுவோம் என சைபர் கிரைம் போலீசார் கூறினார்கள்.

திருட்டுத்தனம்
மாணவர்களின் சுயவிவரங்களை விலை கொடுத்து வாங்கி, அதில் உள்ள தகவல் அடிப்படையில் மாணவர்களை தொடர்புகொண்டு, நீட் தேர்வு பயிற்சிக்கு அழைக்கவும், மேலும் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர அழைப்பதற்கும் திருட்டத்தனமாக பயன்படுத்துகிறார்களாம். இந்த விவகாரத்தில் சிக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களின் தகவல்களை விலைக்கு விற்கப்படும் என்ற ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications