சிறந்த இதழியலாளர்களுக்கு விருதுடன் ரூ. ரூ5 லட்சம் பரிசுத் தொகை - உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி
பணிக் காலத்தில் இறக்கும் பத்திரிக்கையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறந்த இதழியலாளர்களுக்கு விருதுடன் ரூ5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும் எனவும் சட்டசபையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். பணிக் காலத்தில் இறக்கும் பத்திரிக்கையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை இன்று காலை கூடியதும் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலை அமைக்கப்படும். கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும். ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சிலை அமைக்கப்படும்.
காந்தி மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும். தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும். சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும் நாமக்கல் நகரில் அரங்கம் அமைக்கப்படும்
கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும். இந்தி திணிப்பை எதிர்த்து முதலில் உயிர் தியாகம் செய்த மொழிப்போர் கீழபழுவூர் சின்னசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

பத்திரிகையாளர் நல வாரியம்
பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும், பணிக் காலத்தில் இறக்கும் பத்திரிக்கையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5லட்சமாக உயர்த்தப்படும்.
பத்திரிக்கையாளர்கள் மொழி திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற அரசு நிதியுதவி வழங்கப்படும். சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்
அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும். அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சக கட்டிடங்கள் புனரமைக்கப்படும். சென்னை, அரசு கலை அச்சகத்திற்கு சுமையூர்தி ஒன்று கொள்முதல் செய்யப்படும். சென்னை அரசு கலை அச்சகத்திற்கு ஒரு காகிதம் சிப்பம் கட்டும் இயந்திரம் கொள்முதல் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications