திமுகவை விடாமல் அடித்த மாணிக்கம் தாகூர்.. மதுரை வடக்கு தொகுதியை விடாப்பிடியாக கேட்பது ஏன்? காரணம்?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இதில் குறிப்பாக, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸிற்கு ஒதுக்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் குறிப்பாக அந்த தொகுதியை காங்கிரஸ் கேட்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோதலின் தொடக்கப்புள்ளி
இந்தக் கோரிக்கையின் பின்னணியில் ஒரு வலுவான அரசியல் மோதல் உள்ளது. தற்போது மதுரை வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் திமுக-வின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி. அண்மையில் நடைபெற்ற திமுக கூட்டமொன்றில் பேசிய அவர், பூத் ஏஜெண்டுகளைக் கூட நியமிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் இருப்பதாகக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அதிகாரப் பகிர்வு கேட்கும் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.
மாணிக்கம் தாகூரின் பதிலடி
கோ. தளபதியின் இந்தப் பேச்சு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, மாணிக்கம் தாகூர் மதுரை வடக்கு தொகுதியைக் குறிவைத்துள்ளார். "தன்மானம் காக்க சிலருக்குப் பாடம் புகட்ட வேண்டும்" என்று பதிவிட்ட அவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸிற்கே ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்:
தளபதி அட்டாக்: கூட்டணிக்குள் காங்கிரஸை திமுக நிர்வாகிகள் கிண்டல் செய்வதைத் தடுத்து நிறுத்தவும், தொண்டர்களின் சுயமரியாதையை நிலைநாட்டவும் இந்தத் தொகுதியைக் கைப்பற்ற அவர் விரும்புகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டம் என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்த்து போராடி வருகிறோம்.
காங்கிரஸ் கட்சி பெரிய கப்பல் போன்றது. கப்பல் நேராக போய்க் கொண்டிருக்கிறது. திரும்புவதற்கு லேட்டாகும். நாம் சரியாக கரை சேர வேண்டும். நாம் சொத்து சுகம் கேட்கவில்லை. மரியாதை கொடுத்தால் போதும்.
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் எல்லாம் காங்கிரஸை மட்டம் தட்டி பேசும் போது கோபம் வருகிறது, வருத்தம் ஏற்படுகிறது. திமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் செய்த தவறுகளுக்காக பழியை சுமந்தவர்கள் நாங்க! திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி பேசியது வருத்தமாக இருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்து 20 நாட்களாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. கோ.தளபதி வருத்தமும் தெரிவிக்கவில்லை.
அவர் பேசியதால் எல்லாரும் காங்கிரஸை சாதாரணமாக நினைத்து பேசுகிறார்கள். இதை கேட்டுக் கொண்டு சும்மா இருப்பவன் நான் கிடையாது. எங்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம், என்றுள்ளார்.
அதிகாரப் பகிர்வு (Power Sharing): கடந்த 58 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் தாகூர், இனி வரும் தேர்தலில் காங்கிரஸ் '12-வது ஆட்டக்காரராக' இருக்கக் கூடாது என்றும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
ஆட்சியில் பங்கு: மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், "திமுக செய்த தவறுகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது" என்று குறிப்பிட்ட அவர், கூட்டணி ஆட்சியை ஒரு முக்கிய இலக்காக முன்வைத்துள்ளார்.
மதுரை வடக்கு தொகுதி என்பது வெறும் இடப்பங்கீடு சார்ந்தது மட்டுமல்ல; அது திமுக-காங்கிரஸ் இடையேயான 'ஈகோ' மோதலாகவும் மாறியுள்ளது. வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கவுள்ள முறையான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், இந்தக் கோரிக்கை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications