குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக சென்னையில் பாஜக பேரணி.. புறக்கணித்த அதிமுக, பாமக
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக, சென்னையில் பாஜக இன்று பேரணி நடத்தியது. ஆனால் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான, அதிமுக மற்றும் பாமக இதில் பங்கேற்காமல் அதிர்ச்சி அளித்தன.
குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி, முஸ்லிம்கள் தவிர்த்த பிற மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும். ஈழத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வில்லை. இவற்றை கண்டித்து திமுக சார்பில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்றன.
இந்தநிலையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சபரிமலை சீராய்வு.. 9 நீதிபதிகள் பெஞ்ச் அமைப்பு.. மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு இடமில்லை
சென்னை பேரணி
ஏற்கனவே இந்த சட்டம் குறித்து நாள்தோறும் வீடு வீடாக சென்று விளக்க பிரச்சாரத்தை பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இவ்வாறு ஒரு பேரணியை பாஜக நடத்தியது. இந்த பேரணியில் அதிகப்படியான தொண்டர்களை கூட்டி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருந்தது.
தனித்து பேரணி
ஆனால், இந்த பேரணியில், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அதிமுக மற்றும் பாமக பங்கெடுக்கவில்லை. இது பாஜக தலைமைக்கு கண்டிப்பாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்தான். ஆனால், இது பாஜக மட்டுமே நடத்திய பேரணி என்று தற்போது பாஜக தலைவர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். நேற்று இரவு வரை அதிமுக தலைவர்களிடமும், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாசிடமும் தொலைபேசியில் மூத்த பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டு இந்த பேரணியில் அந்த கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் அக்கட்சிகள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேரணி பதாகைகள்
என்னதான் பாஜக தனியாக இந்த பேரணியை ஏற்பாடு செய்திருப்பதாக கூறினாலும் கூட, பேரணி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பேரணிக்கு அழைப்பு விடுப்பதாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. எனவே சிறுபான்மையினரின் கோபத்தை சம்பாதிக்க வேண்டாம் என்று நினைத்து இந்த பேரணியில், அதிமுக மற்றும் பாமக பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
|
பின்னணி
அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி அன்வர்ராஜா, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், சிறுபான்மையினர் அதிமுகவினரை எதிரிகள் போல் பார்ப்பதாக சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். இதேபோல பாமக, தனது பொதுக்குழு கூட்டத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று டிசம்பர் 30-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் வருகை தராததால், வெறும் பாஜக தொண்டர்கள் மட்டுமே இந்தப் பேரணியில் பங்கேற்றனர். எனவே எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.