துப்பு துலங்கியது! சென்னையில் உயிரிழந்த மூதாட்டி உயிருடன் வந்தது எப்படி தெரியுமா? விலகிய மர்மம்!
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ரயிலில் அடிப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்து விட்டதாக கருதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவலர்கள், உடலை மாற்றி கொடுத்துவிட்டதால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து தற்போது உயிரிழந்த மூதாட்டியின் உடல் அவர்களது நிஜமான உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியின் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா. 72 வயதான மூதாட்டியான இவர், கணவனை இழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். மகனும் வேலைக்கு சென்றுவிடவே, தனியாக இருக்கும் இவர் அடிக்கடி கோயிலுக்கு சென்று வந்திருக்கிறார். கோயிலுக்கு செல்வது ஒரு வழக்கமாகவே இவருக்கு இருந்துள்ளது. இதே போல சம்பவம் நடந்த நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார்.

விபத்து
ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் சந்திரா வராததால், அவரது மகன் எல்லா இடங்களிலும் தேடியுள்ளார். அப்போதுதான் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் மார்கத்தில் வயதான மூதாட்டி ஒருவர் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்த மூதாட்டியை காண சென்றுள்ளனர். விபத்தில் மூதாட்டியின் உடல் அடையாளம் தெரியாததால், உருவத்தை வைத்து தனது தாய்தான் என உடலை பெற்று வந்துள்ளனர்.

நல்லடக்கம்
மரணம் குறித்து உற்றார் உறவினர்களுக்கு சொல்லி அனுப்பப்பட்டுள்ளது. எல்லோரும் அடுத்த நாள் துக்க வீட்டுக்கு வந்துள்ளனர். ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. உடல் விபத்தில் ஏற்கெனவே படுகாயமடைந்துள்ள நிலையில், அதனை நீண்ட நேரம் வைத்திராமல் உடனடியாக மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். எல்லாம் முடிந்து பின்னர் மகன், உறவினர்கள் வீடு திரும்பி சோகத்தில் அமர்ந்திருந்துள்ளனர்.

அதிர்ச்சி
குடும்பமே சோகத்தில் இருக்கையில் உயிரிழந்ததாக கருதப்படும் சந்திரா எனும் மூதாட்டி திடீரென உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சில பயந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். மகனுக்கு அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மகிழ்ச்சி மறுபுறம் இருந்துள்ளது. இதனையடுத்து நடந்த விஷயத்தை சந்திரா கூறியுள்ளார். உயிரிழந்தது தான் இல்லையென்றும் விளக்கியுள்ளார். இந்த விளக்கத்தை கேட்ட உறவினர்கள் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

உரியவர்களிடம் ஒப்படைப்பு
அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்துள்ள நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் உயிரிழந்தது தாம்பரத்தை சேர்ந்த பத்மா என அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினருக்கு சொல்லி அனுப்பப்பட்டு உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications