புது சிக்கல்? அதிமுக அவைத் தலைவர் தேர்வு விவகாரம்.. ஓபிஎஸ், எடப்பாடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுக அவைத் தலைவரை தேர்ந்தெடுக்க தடை விதிக்க கோரிய வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார், அதன்பின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு பொது செயலாளர் பதவி நீக்கப்பட்டது.ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் மனு
தற்போது அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ந் தேதி இறந்து போன நிலையில்,புதிதாக அவைத்தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை மாநகர 23 வது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

தடை விதிக்க கோரிக்கை
அவர் தன் மனுவில்,கட்சி விதிமுறைப்படி உட்கட்சி தேர்தலை நடத்தி பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டுமென்றும், பின்னர் பொது செயலாளர் கூட்டும் பொது குழுவிலேயே அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதால், தற்போதைய சூழலில் சட்டத்திற்கு புறம்பாக பொது குழுவின் மூலமோ அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பரிந்துரையின் மூலமோ அவைத் தலைவரை நியமனம் செய்யவோ, தேர்வு செய்யவோ தடை விதிக்க வேண்டுமென கோரியுள்ளார்.

பதிலளிக்க ஓபிஎஸ், எடப்பாடிக்கு உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி E. தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மனு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

புது தலைவலி
அதிமுகவுக்கு உரிமை கொண்டாடி சசிகலா ஒருபக்கம் வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவை தலைவர் விவகாரம் அந்த கட்சியின் தலைமைக்கு மற்றொரு தலைவலியாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications