விளம்பரத்துக்காக என் மேல வழக்கு போட்ருக்காங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி தரப்பு வாதம்
சென்னை: தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாக கூறியிருந்தார்.
ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

விஜய் சேதுபதிக்கு எதிராக வழக்கு
அந்த மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

வழக்கு தொடர்பாக விசாரணை
அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

விளம்பர நோக்கத்தில் வழக்கு
அப்போது, விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத் தனமாக உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார். விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

விசாரணை ஒத்திவைப்பு
வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே பதில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மகா காந்தி தரப்பில் வழக்கறிஞர் ஆனார் இன்பஃன்ட் தினேஷ் ஆஜராகி, நோட்டீஸ் வந்ததால்தான் பதில் மனுதாக்கல் செய்ததாகவும், விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல என்றும், விஜய் சேதுபதியும் அவரது மேலாளரும் தன்னை திட்டி தாக்கியதால்தான் வழக்கு தொடர்ந்ததாக விளக்கம் அளித்தார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications