மக்களுக்கான கட்சி என்றுமே காங்கிரஸ் தான்... குஷ்பு கருத்து
சென்னை: எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியால் வரவே முடியாது எனக் கூறப்பட்டதோ அங்கெல்லாம் முன்னணியில் காங்கிரஸ் உள்ளது என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, மத்தியபிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சென்ற மாதம் 12 ம் தேதி தொடங்கி , கடந்த 7 ம் தேதி வரை தேர்தல்கள் நடந்தன. இதனையடுத்து, இன்று காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அதில், தெலுங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்தது. பின்னர், பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. தெலுங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.
அதே போல், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மற்ற மூன்று மாநிலங்களில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது
இந்தநிலையில், காங்கிரசின் முன்னிலை குறித்து அக்கட்சியினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு பேசியதாவது: காங்கிரஸ் கட்சியால் எந்த மாநிலங்களில் எல்லாம் வர முடியாது என சொல்லப்பட்டதோ அங்கு எல்லாம் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒரு நாளும் கை விட மாட்டார்கள் , இந்த வெற்றியை மக்களின் வெற்றியாகவே பார்க்கிறேன் என்றார். மேலும், மக்களுக்கான கட்சி என்றுமே காங்கிரஸ் தான் என்றார்.