சங்கரன்கோவில்: 30 ஆண்டுகால அ.தி.மு.க. கோட்டையை தகர்த்த தி.மு.க.. அ.தி.மு.க தோல்விக்கு காரணம் இதுதான்
சங்கரன்கோவில்: தென் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான சங்கரன்கோவில் தொகுதியை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி சரித்திர சாதனை படைத்துள்ளது திமுக.
தமிழகத்தில் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சட்டசபை தேர்தல் முடிந்துள்ளது. மு.க.ஸ்டாலினும் தலைமையிலான தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

திமுக ஆட்சி
இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கிறது தி.மு.க. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். சொல்லி அடித்து ஆட்சியை பிடித்துள்ள திமுக சென்னை தங்களின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்தது. தென் மாவட்டங்களில் எப்போதும் வலுவாக இருக்கும் திமுக இந்த முறையும் அதனை செய்து காட்டி இருக்கிறது.

சரித்திர சாதனை
தென் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான சங்கன்கோவில் தொகுதியை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி சரித்திர சாதனை படைத்துள்ளது திமுக. தமிழகத்தில் இதற்கு முன்பு திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் எல்லாம் சங்கரன்கோவிலை மட்டும் அசைக்க முடியவில்லை. 1989-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.தங்கவேலு வெற்றி பெற்றார். ஆனால் அவர் 1991-ம் ஆண்டு வரை மட்டுமே பதவியில் இருந்தார்.

ராஜலட்சுமி தோல்வி
அதன்பின்னர் 1991-ல் அதிமுகவின் கோபாலகிருஷ்ணன் அங்கு வெற்றி பெற்றதை தொடந்து சங்கரன்கோவில் அதிமுகவின் கோட்டையாக மாறியது. அதன்பின்னர் 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பசாமி வெற்றி பெற்றார். 2012-ல் அங்கு இடைத்தேர்தல் நடந்தபோது அதிமுகவின் முத்துசெல்வி வெற்றி பெற்றார். இதனையடுத்து 2016-ல் அங்கு ஜெயித்த ராஜலட்சுமி அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் இந்தமுறை ராஜலட்சுமி தோல்வி அடைந்துள்ளார்.

காரணம் என்ன?
ராஜலட்சுமியை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈ.ராஜா 11297 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜலட்சுமியை தோற்கடித்தார். இதன் மூலம் 30 ஆண்டுகால அதிமுகவின் கோட்டையை திமுக தகர்த்தெறிந்துள்ளது. வன்னியர் உள் இடஒதுக்கீடு முறையை முந்தைய அதிமுக அரசு அமல்படுத்தியதால் இதனை எதிர்த்து சில கிராமங்களில் ராஜலட்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொகுதி மக்களின் கடும் கோபம் தேர்தல் முடிவில் வெளிப்பட்டது.

அமமுக வேட்பாளர்
இதேபோல் அமமுக வேட்பளார் அண்ணாதுரை 22,682 வாக்குகள் பெற்று ராஜலட்சுமி ஓட்டுக்களை பிரித்தார். இதுவும் அதிமுக தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்து விட்டது. பர்கூரில் ஜெயலலிதா தோற்றபோதும், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போதும் சங்கரன்கோவிலில் இரட்டை இலை மலர்ந்த நிலையில் தற்போது உதயசூரியன் அதிரடியாக உதித்துள்ளது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications