Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் சுயமரியாதையை திராவிட மாடல் அரசு நிலைநாட்டியுள்ளது! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் சுயமரியாதையை திராவிட மாடல் அரசு நிலைநாட்டியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரையும் அதன் பிறகு எழுந்த சர்ச்சையும் பற்றி திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் வருமாறு;

 ஆளுநர் உரை

ஆளுநர் உரை

ஆண்டுத் தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்குவது மரபு. அந்த மரபுக்கு மதிப்பளித்து, அரசின் கொள்கை அறிக்கையாக முன்வைக்கப்படும் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு, அதனை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி, உரிய அனுமதி பெற்று, ஆளுநரின் கையொப்பமும் இடப்பட்ட அந்த உரை, அச்சுக்கு அனுப்பப்பட்டு, சட்டமன்றம் கூடிய ஜனவரி 9-ஆம் நாள் காலையில் உறுப்பினர்களின் மேசைகளில் வைக்கப்பட்டிருந்தது.

பிரபல ஏடுகள்

பிரபல ஏடுகள்

அதன் பின் நடந்தவை என்ன என்பது குறித்தும், தாம் ஒப்புதல் அளித்த உரைக்கு மாறாக ஆளுநர் அவர்கள் சேர்த்தல் - நீக்கலுடன் ஆற்றிய உரையைப் பற்றியும் இந்திய அளவிலான பிரபல ஏடுகளின் பார்வையை மட்டும் முன்வைக்கிறேன். THE HINDU நாளிதழ் Bad and Ugly என்ற தலைப்பிட்டு, 12-1-2023 அன்று வெளியிட்ட தலையங்கத்தின் இறுதியில், "ஆளுநர் மாளிகையில் பதவி வகிப்பவர்கள் தங்களின் மேலாதிக்க உணர்வைக் கைவிட்டு, தேங்கிக் கிடக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல் போன்ற தங்களது அரசமைப்புச் சட்டப் பணிகளைச் செய்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.

பொறுப்புக்கு களங்கம்

பொறுப்புக்கு களங்கம்

ராம்நாத் கோயங்கா அவர்களால் தொடங்கப்பட்டு வட இந்தியாவில் வெளிவரும் ஆங்கில நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் "The Misreading" என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், "சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் வாசிக்கப்படுவதற்காக அரசால் தயாரிக்கப்படும் ஆளுநர் உரை என்பது அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தும் அறிக்கை ஆகும். அதனை ஆளுநர் அவர்கள் முழுதாகப் படிக்க வேண்டும் என்பதுதான் மரபு. ஆளுநர் ரவி படிக்காமல் தவிர்த்த பகுதிகளில் சர்ச்சைக்குரியது என்றோ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றோ தவறானது என்றோ கூறத்தக்க வகையில் எதுவும் இல்லை. பின் ஏன் ஆளுநர் அவற்றை மறுப்புக்குரியதாகப் பார்த்தார் என்று விளங்கவில்லை. அவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் அவர் வகிக்கும் பொறுப்புக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோதம்

ஜனநாயக விரோதம்

Times Of India நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தியில், 'மாநில அரசுகளின் சட்ட மசோதாக்களை ஆளுநர் வேண்டுமென்றே கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதம்' எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. "ஒரு மாநில ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இரு நிலை உறவுகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படவேண்டிய பொறுப்பைக் கொண்டவர். அவ்வகையில் முன்னாள் காவல்துறை அதிகாரியான ஆர்.என்.ரவி இன்னும் நிர்வாக ஞானத்துடன் செயல்பட வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளது.

பிற்போக்கு அரசியல்

பிற்போக்கு அரசியல்

The Tribune இதழ் Govt-Governor tussle என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், "தமிழ்நாடு என்பதைவிடத் தமிழகம் என்பதுதான் சரியாக இருக்கும் எனத் தெரிவித்ததிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறார். தேவையற்ற இந்த ஆலோசனை என்பது, ஆளுநரின் அரசியல்-சித்தாந்த நடுநிலைமை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. மாநிலத்தின் 'பிற்போக்கு அரசியல்' என்ற வகையில் அவர் பேசுவதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியிலான ஆளுநரின் அலுவலுக்குப் பொருத்தமற்றதாக உள்ளது. அரசு நிர்வாகத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் அரசியல் சட்ட வரையறைக்குள் ஆளுநர் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.

திரும்ப பெற வேண்டும்

திரும்ப பெற வேண்டும்

"ஆளுநர் ரவி சில நிமிடங்களில் மாநிலத்தையும், அதன் தலைவர்களையும், சட்டமன்றத்தையும், அதன் நடவடிக்கைகளையும், அரசியல் சட்டத்தையும், மரபுகளையும் அப்பட்டமாக அவமதித்து - அவமரியாதை செய்திருக்கிறார். ஆகவே தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்" என "The case of the intractable governor" என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு The New Indian Express பத்திரிக்கையில் விரிவாகக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

புள்ளி, கமா கூட சேர்க்க முடியாது

புள்ளி, கமா கூட சேர்க்க முடியாது

மக்களவையின் முன்னாள் செயலர் (Secretary General) பி.டி.டி.ஆச்சாரி அவர்கள் "மாநில அரசு தயாரிக்கும் உரையில் ஆளுநர், ஒரு புள்ளி, கமா கூட சேர்க்க முடியாது" என்பதை விளக்கியுள்ளார். ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தேவசகாயம், பாலச்சந்திரன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் அவை மரபுக்கும் அரசியல் சட்ட மாண்புக்கும் மாறாக ஆளுநர் நடந்துகொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் மாண்புமிகு ரகுபதி அவர்களுடன் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்து, ஆளுநருக்கு அறிவுரை வழங்குமாறு கடிதம் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சுயமரியாதை

தமிழ்நாட்டின் சுயமரியாதை

அரசின் கொள்கைகளை முன் வைக்கும் உரையில் இடம்பெற்ற சிலவற்றை ஆளுநர் அவர்கள் தவிர்த்து, தாமாகச் சிலவற்றை சேர்த்தபோதும் அவை எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை. மாறாக, அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு என்ற பெயரும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட மறைந்த மாபெரும் தலைவர்களின் திருப்பெயர்களுமே தமிழ்நாடு சட்டமன்றத்தின் அவைக்குறிப்பில் இடம்பெறச் செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சுயமரியாதையைப் பின்புலமாகக் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் சுயமரியாதையைச் சட்டப்பேரவையில் தி.மு.கழகம் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிலைநாட்டியிருக்கிறது.

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல்

சட்டப் பேரவையின் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலான போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்தப் பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது. அந்தச் சுவை, தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும் இடம்பெற்று, அவர்களின் உள்ளமெலாம் இனித்திட வேண்டும் என்பதற்காக ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+