உயர்நீதிமன்ற தீர்ப்பால் அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் இனி ஜீரோதான்- ஹேப்பி மோடில் ஜெயக்குமார் அட்டாக்
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11-ல் நடத்திய பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் ஜீரோதான் என சாடியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னையில் ஜூலை 11-ந் தேதி அக்கட்சியின் பொதுக்குழுவை நடத்தியது. அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அத்துடன் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓபிஎஸ் மேல்முறையீடு சென்றால்.. ”ஒன்றும் நடக்காது” அதிமுகவின் வைகை செல்வன் அதிரடி!
தனி நீதிபதி தீர்ப்பு
இந்த ஜூலை 11 பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலைமைதான் தொடரும் என தீர்ப்பளித்தார். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
எடப்பாடி கோஷ்டி கொண்டாட்டம்
சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்து இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜூலை 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். இது எடப்பாடி பழனிசாமி தரப்பை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
ஓபிஎஸ் நீக்கம் செல்லும்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் ஏற்கக் கூடிய மகிழ்ச்சியைத் தரக் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இது. அதிமுக தொண்டர்கள் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும் என்றார்.
எடப்பாடி பதவி செல்லும்
மேலும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் ஜெயக்குமார்.