போராட்டத்தைத் தொடரும் ஆசிரியர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது .. ஹைகோர்ட் அறிவிப்பு
சென்னை: பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை, எங்களது வேலை அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தொடர்ந்து 4 வது நாளாக ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து, தங்களது 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் இதை கோர்ட் நிராகரித்து விட்டது.
தமிழகம் எங்கும் ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக பள்ளியைப் புறக்கணித்து, மாவட்டங்கள் தோறும் ஆட்சியர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு ஆசிரியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
இந்த நிலையில், போராட்டத்தைத் தொடரும் ஆசிரியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் அரசு கோரிக்கை வைத்தது. அதை விசாரித்த நீதிமன்றம், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் யார் யார் எனக் கண்டு பிடிப்பதும் அரசின் வேலை. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
வேலை நிறுத்தம் பற்றிய அறிவிப்பு நோட்டீஸுக்கும் தடை விதிக்க முடியாது. ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது தமிழக அரசுதான். நாங்கள் அறிவுறுத்தலை மட்டுமே வெளியிட்டோம். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.