நடப்பாண்டில் 2 முறை விலையை உயர்த்திய தனியார் பால் நிறுவனங்கள்.. இருந்தும் சரியாத விற்பனை
சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை போட்டிப் போட்டுக் கொண்டு உயர்த்தி வருவதால், வாடிக்கையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இந்த விலையேற்றத்தால் ஒரு பக்கம் அதிர்ச்சியடைந்தாலும், நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட பால் பாகெட்டுகள் வாங்குவதை மக்கள் குறைத்து கொண்டதாக தகவல் இல்லை. நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு முறை டீயோ, காபியோ அருந்தாமல் நமது வாழ்க்கை நகருவதில்லை.

தமிழகத்தில் அரசின் ஆவின் நிறுவனம் மட்டுமின்றி ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா, திருமலா உள்ளிட்ட நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் பால் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தின. இந்த நிலையில் ஆரோக்யா மற்றும் ஹெரிடேஜ் நிறுவனங்களின் பால் விலை, கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் மீண்டும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
கொள்முதல் விலை உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கூலி ஆகியவற்றின் காரணமாக தான் விலையேற்றப்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அதன்படி ஆரோக்யா ஃபுல்கிரீம் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.54- லிருந்து ரூ.56- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42- லிருந்து ரூ.44- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் ஹெரிடேஜ் நிறுவனத்தின் நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.48-லிருந்து ரூ.50- ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.52-லிருந்து ரூ.54- ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே திருமலா நிறுவனம் ஃபுல்கிரீம் ஒரு லிட்டர் பாலின் விலையை ரூ.1 உயர்த்தியது, இது போல மேலும் சில தனியார் நிறுவனங்கள் கடந்த மாதமே சிறிதளவு தங்கள் பால் விலையை உயாத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த விலையேற்றத்தால் பால் விற்பனை குறையவில்லை என விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். பால் தற்போது மிக அத்தியாவசிய பொருளாகி விட்டதால், ஒரு நாளைக்கு எவ்வளவு பால் பாக்கெட்டுகளை வாங்கி வைத்தாலும், அது மாலைக்குள் காலியாகி விடுவதாக கூறியுள்ளனர் விற்பனையாளர்கள்.
கடும் வெயில் காரணமாக டீ விற்பனை குறைந்து விட்ட நிலையில், தற்போது பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் தங்கள் தொழில் நெருக்கடியில் உள்ளதாக டீக்கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக 25 லிட்டர் பால் உபயோகப்படுத்தும் இடத்தில் தற்போது 20 லிட்டருக்கும் குறைவாகவே பயன்படுத்தி வருவதாக சிறியளவிலான டீ கடை உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும் தனியார் நிறுவனங்களின் பாலை விட, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 வரை குறைவாக இருப்பது, மக்களை சற்றே நிம்மதியடைய செய்துள்ளது.
ஆனால் சமீபத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களை பாதிக்காதவாறு ஆவின் பால் விலையும் சற்று உயர்த்தப்படும் என்றார். பால் விலையை அரசு உயர்த்தினால் தான் அது மக்களை பாதிக்குமா இல்லையா என்பது தெரிய வரும் என, பொதுமக்கள் தற்போது முதலே புலம்பி தவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications