விஷ சாராய உயிரிழப்பு.. திமுகவை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதிப்புக்குள்ளாகி பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விஷ சாராயம் அருந்தியதில் 22 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக தமிழக அரசு நடவடிக்கையில் ஈடுபட்டு விஷசாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து. விஷ சாராயம் அருந்தி மக்கள் பலியானதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
அந்த வகையில், விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் மற்றும் டாஸ்மாக் மதுபான விற்பனை கட்டுப்பாடின்றி நடப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய் மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தந்த மாவட்ட மகளிர் அணி தலைவி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். விஷ சாராயத்தை தடை செய்ய தவறிய அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்பாட்டத்தில் எழுப்பி வருகின்றனர்.

அதேபோல், பாஜக குழுவினர் நாளை ஆளுநரை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாஜக குழுவினர் ஆளுநரை நாளை சந்திக்க இருக்கிறார்கள்.
அப்போது, டாஸ்மாக் மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதல்வருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications