பாட்ஷா முதல் மா.செ சந்திப்பு வரை.. ரஜினியும் அரசியலும்.. நடந்தது என்ன?
சென்னை: ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து இன்று அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படும் நிலையில் அரசியலுக்கும் அவருக்குமான தொடர்பு குறித்து சில விஷயங்கள் நினைவுக்கூரப்பட்டு வருகின்றன.
Recommended Video
25 ஆண்டுகளுக்கு பிறகு 2017ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக கூறியிருந்த ரஜினிகாந்த் அதுகுறித்து அறிவிப்பதற்கு பின்னர் 2 ஆண்டுகள் கழித்து செய்தியாளர்களை சந்திக்கிறார். முன்னதாக அவரது சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போது அவரது படங்களில் அரசியல் வாடையே இல்லாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
நீக்கம்
பின்னர் 1995-ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாகவும் கூறியிருந்தார். அப்போது அந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் அமைச்சராகவும் இருந்த ஆர் எம் வீரப்பன் ரஜினியின் கருத்தை கண்டிக்கவில்லை என கூறி அவரை பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.
அரசியல் வருகை
இதையடுத்து ரஜினிகாந்த் - ஜெயலலிதா இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. அப்போது ஜெயலலிதா வீடு அருகே ரஜினியின் கார் வரும் போது அந்த காரை சோதனையிடுவது உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அது போல் முத்து திரைப்படத்திலும் அவர் பேசிய வசனமான நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன் என்ற வசனம் அரசியல வருகைக்கான சமிக்ஞையாகவே பார்க்கப்பட்டது.
வெற்றி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1996-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திமுக -தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினியின் வாய்ஸால் அந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
அறிவுரை
2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும் சமரசப் போக்கை கையாண்டுவந்தார் ரஜினி. அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் கூட தைரியலட்சுமி என அவருக்கு புகழாரம் சூட்டினார். 2002-ஆம் ஆண்டு பாபா படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார். பின்னர் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவின் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக பணியாற்றுமாறு ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
234 தொகுதிகள்
எனினும் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து அரசியல் குறித்து கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொண்டார் ரஜினிகாந்த். பின்னர் ஜெயலலிதா, கருணாநிதி காலமானதை அடுத்து தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக முதல் முறையாக நீண்ட காலத்திற்கு பிறகு ரஜினி கருத்து தெரிவித்திருந்தார். அப்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி என அறிவித்தார்.
சர்ச்சை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், பெரியார் குறித்த சர்ச்சை கருத்து, சிஏஏவுக்கு ஆதரவான போக்கு உள்ளிட்டவற்றால் ரஜினி மக்கள் எதிர்ப்பை பெற்றார். பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ரஜினி எடுப்பதாக கூறியிருந்த நிலையில் தன் மீது காவி சாயம் பூச முடியாது என கூறினார். பின்னர் டெல்லி வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால் மத்திய அரசு ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள் என கூறி தனக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் ஒரு கருத்தை கூறியிருந்தார். இன்றைய நிலையில் செய்தியாளர்களை சந்திக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.