பின்னணியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள்! இல்லையேல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது! பரபர வாதம்
சென்னை: மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது என, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட நிலையில், அரசுத் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 18ஆம் அந்த பகுதியைச் சேர்ந்த பிரவீன், சுரேஷ், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் அங்கு கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர்.

அவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு மேல் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் 65க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலருக்கு பார்வை பாதிப்பு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. உடல் நலனுக்கு கேடு விளைக்கும் மெத்தனால்லை தொழிற்சாலைகள் வாங்கி அவற்றை கள்ளச்சாராயத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டதும், அதனை வாங்கி குடித்தவர்கள் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றி இருக்கும் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து வடமாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசாரும் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, பா.ஜ. வழக்கறிஞர் மோகன்தாஸ், வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.மணி, மாவட்ட நிர்வாகம், உள்ளூர் அரசியல்வாதிகள் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து, கொண்டு வந்து விற்க முடியாது.
ஆனால் போலீஸ், அரசியல்வாதிக்கு தொடர்பில்லை என அரசு கூறுகிறது என்றார். கடந்த 2022-23 ம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆண்டுக்கு 9 கோடி விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை முறையாக செலவிட்டிருந்தால் நிச்சயமாக எந்த மரணமும் நிகழ்ந்திருக்காது. மாநில அரசின் தோல்வியை காட்டுகிறது என வாதிட்டார்.
கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.சம்பவத்துக்கு பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி, தாம்பரத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் திரும்பப் பெற்றதற்கு எந்த் விளக்கமும் தெரிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மாநில போலீஸ் தவிர்த்து, வேறு அமைப்பு விசாரித்தால் தான், முழுமையான நீதியை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார். அரசுத் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications