ஐஸ் மழை.. ஆசை வார்த்தை.. 415 பவுன் நகையை கழட்டி கொடுத்த சென்னை பெண்.. காதல் மன்னன் கைது
சென்னை: கணவனை இழந்த பெண்கள், கணவனை பிரிந்து வாழும் பெண்களை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுவந்த காதல் மன்னன் முகமது ஷபான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போன்ற பெருநகரங்களில் விதவைகள், விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து சமூக வலைதளங்களில் பழகும் சில காதல் மன்னன்கள், பேசும் போது ஐஸ் மழையை பொழிந்து, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகிறார்கள். அவர்கள் சொல்லும் பல பொய்கள் நம்பக்கூட முடியாதவையாக இருக்கும். கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது, கார் இருக்கிறது, பங்களா இருக்கிறது என டிப்டாப் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் ஆப்களில் வலை வீசுகிறார்கள்.

இவர்களின் பொய்யை உண்மை என்று நம்பினாலும் பெண்கள் பணத்தை பறிகொடுப்பதுடன், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்வதும் நடக்கிறது. விதவைக்குத்தான் வாழ்வு கொடுக்க போகிறேன். விவாகரத்தான பெண்களுக்கு வாழ்வு கொடுப்பதே லட்சியம் என்கிற அளவிற்கு பொய்களை அவிழ்த்து விடுவார்கள். அந்த பொய்யில் வழுக்கி விழும் பெண்கள், அதன்பிறகு போலீஸ் ஸ்டேசன் வரை போய் புகார் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். அப்படி ஒரு காதல் மன்னனை பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம்.
காதல் மன்னன்: சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள காதல் மன்னன் பெயர் முகமது ஷபான் (வயது 36). இவரை ரஹமத்துல்லா என்றும் அழைக்கிறார்கள். இளங்கலை பட்டதாரியான இவர் புதுச்சேரி, முத்தையால் பேட்டையைச் சேர்ந்தவர். இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்கள்: ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து சமூக வலைதளங்கள் மூலம் விவாகரத்தான பெண்கள், விதவைகள் ஆகியோரை குறி வைத்து பழகுகிறார். முகமது ஷபான் பெண்களிடம் பேசும் போது நான் நகைக்கடை வைத்திருக்கிறேன். இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறேன், நான் ஒரு பெரிய தொழில் அதிபர் என்று அள்ளிவிடுவார். மேலும் விதவைப்பெண்களுக்கு வாழ்வு கொடுக்க விரும்புகிறேன் என்று கூறுவார். மேலும் கணவனை பிரிந்த பெண்களாக இருந்தால் விவாகரத்தான பெண்களுக்கு வாழ்வு கொடுக்க விரும்புகிறேன் என்று கூசாமல் பொய் சொல்வாராம்.
நகை பணம்: அவரது காதல் வலையை பார்த்து பதில் அளிக்கும் பெண்களிடம் நேரில் சந்திக்க ஆசையாக உள்ளது என்று கூறுவாராம். அடுத்து நேரில் சந்தித்து இனிமையாக பேசுவாராம்.திருமணம் செய்து கொள்வதாக சொல்லி அவர்களிடம் நகைகள், பணத்தை லட்சக்கணக்கில் பறிப்பாராம். பின்னர் பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவாராம். ஆசைகள் நிறைவேறிய பின்னர் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்வாராம்.பின்னர் வேறு ஒரு பெண்ணுக்கு திரும்பவும் வலை விரிப்பாராம். இப்படி செய்து வந்துள்ளாராம்.
மணமகன் தேவை: அண்மையில் சென்னையைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சிக்கி உள்ளார். கணவரை விவாகரத்து செய்தவர். 2-வது திருமணத்துக்கு, நல்ல மணமகன் தேவை என்று வாட்ஸ்-அப் மூலம் தகவல் வெளியிட்டிருந்தார். அதை தெரிந்து கொண்ட முகமது ஷபான், ஆசை வார்த்தை கூறி வழக்கம் போல் ஏமாற்றி உள்ளார்.
415 பவுன் நகை : அந்த பெண்ணின் முதல் கணவர், செய்வினை வைத்துள்ளதாகவும், அதற்கு மசூதியில் மந்திரம் ஓதி சரி செய்துவிடலாம் என்றும் கதை விட்டுள்ளார். அதற்கு நிறைய தங்க நகைகள், பூஜையில் வைப்பதற்கு தேவைப்படுகிறது என்று சொல்லி கொஞ்சம், கொஞ்சமாக 415 பவுன் நகைகள் வாங்கி உள்ளார்.பின்னர் வழக்கம் போல் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
சென்னை போலீஸ் கமிஷ்னர்: தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று ஆசைக்கனவுகளுடன் இருந்த அந்த பெண், போலீசில் போய் புகார் கொடுத்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில், காதல் மன்னன், முகமது ஷபான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
முகமது ஷபான் கைது: அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் ஜான் விக்டர் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் ஏமாற்றியது உறுதியானது. இதையடுத்து காதல் மன்னன் முகமது ஷபான் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப் மற்றும் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
போலீசார் அறிவுறுத்தல்: முகமது ஷபான் பறித்த 415 பவுன் நகைகளில் சிலவற்றை அடகு வைத்ததும், இன்னும் சிலவற்றை விற்பனை செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனிடையே முகமது ஷபானிடம் மோசம்போன பெண்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம், என்று போலீசார் அறிவித்துள்ளனர்.















Click it and Unblock the Notifications