ஆகஸ்ட் 12.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர் வைத்த கோரிக்கை.. உடனே ஏற்றுக் கொண்டு மாற்றிய ஐகோர்ட்
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விடுவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்றைய தினம் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்திற்கு வரவுள்ளதால் விசாரணையை வேறொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது: செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல் அமலாக்கத்துறை வழக்கை விசாரித்து தண்டிக்க சட்டம் அனுமதிக்கிறதா? என உச்ச நீதிமன்றம் நேற்று வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பியது.
நேற்று நடைபெற்ற ஜாமீன் வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறை சார்பில் வக்கீல் சோயிப் ஹுசைன் ஆஜராகி, 'பண மோசடி வழக்கில் செந்தில்பாலாஜிக்கும், சண்முகம், கார்த்திக் ஆகியோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறினார். மேலும் செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றப்பட்ட 'ஹார்டுடிஸ்கில்' கார்த்தி வங்கி கணக்கு தொடங்க விண்ணப்பம் அளித்திருப்பது தெரியவந்துள்ளது என்றும் செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு நடத்திய சோதனையில் 38 ஆவணங்களும், 'எச்.பி. ஹார்டு டிஸ்க்'கும், டெபாசிட் ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக செய்த பண மோசடி விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.
தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட முற்பட்டபோது நீதிபதிகள், 'போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த லஞ்ச ஊழல் வழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஊழல் வழக்கு விசாரணை நடைபெறாமல், பண மோசடி தடுப்பு சட்ட வழக்கு விசாரணையை நடத்தி தண்டிக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'ஊழல் வழக்கு விசாரணையும், அமலாக்கத் துறை வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெறலாம் என்றும் ஆனால், அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை முடிக்க முடியாது என்றும் கூறினார்கள். வாதங்களைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.












Click it and Unblock the Notifications