மே 17ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வரிடம் மருத்துவ குழு கொடுத்த முக்கிய டிப்ஸ்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையை, முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக தளர்த்த வேண்டும் என மருத்துவ குழுவினர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, மருத்துவ குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
மருத்துவ குழுவைச் சேர்ந்த ஐசிஎம்ஆர் அமைப்பின் பிரதீப் கவுர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சில தகவல்கள் தெரிவித்தார். அவர், கூறியதாவது:

அதிக பரிசோதனை
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனையை குறைக்காமல் தொடர முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். நிறைய பரிசோதனை நடந்ததால், அதிகளவு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

சிகிச்சை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலை தேவையில்லை. பிற மாநிலங்களை ஒப்பிட்டால், தமிழகத்தில்தான் மரணமடைந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. எனவே, சிகிச்சை நல்ல வகையில் நடக்கிறது என்பது தெரிகிறது.

பணியிடங்கள்
பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடித்து, ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க் வழங்க வேண்டும். அப்போது பணிபுரிய அனுமதிக்கலாம். மாஸ்க் அணிந்துதான் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்துவது நல்ல முடிவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எப்படி இருக்கும் ஊரடங்கு
மே 17ம் தேதிக்கு பிறகு, சென்னை, கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில், அதிக தளர்வு இருக்கும் என்று தெரிகிறது. மருத்துவ குழுவினர் யோசனையும் அதை ஒட்டியதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications