நீர் பங்கீடு விவகாரம்.. காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் எப்போது? இதோ அப்டேட்
சென்னை: காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 3000 கன அடி வீதம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதுமான நீர் இல்லையென கூறி கர்நாடகா தண்ணீரை திறக்க மறுத்து வருகிறது. இப்படி இருக்கையில் மீண்டும் வரும் 12ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது கர்நாடகாவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என தொடர்ச்சியாக போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்தின. இப்படி இருக்கையில் மறுபுறம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணை நீரைக்கொண்டு 150-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கர்நாடகாவிலிருந்து நீர் திறந்து விடாதது, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாது போன்ற காரணங்களால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,446 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று வெகுவாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 36.94 அடியாகவும், நேற்று 35 அடியாகவும் குறைந்திருக்கிறது. அணையில் இருக்கும் மீன் வளங்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் 9.5 டிஎம்சி தண்ணீர் கட்டாயமாக இருக்க வேண்டும். தற்போது 10.56 டிஎம்சி அளவில்தான் தண்ணீர் இருக்கிறது.
இதே நிலை நீடித்தால் விரைவில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும். எனவே உடனடியாக கர்நாடக அரசு போதிய அளவு தண்ணீரை திறக்க வேண்டியது அவசியமாகும். இந்த சூழலில்தான் வரும் 12ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications