சென்னைவாசிகளே உஷார்.. மெட்ரோவில் போறீங்களா.. "இது ரொம்ப முக்கியம்".. மெட்ரோ நிர்வாகம் திடீர் வார்னிங்
மெட்ரோ ரயிலில் நூதன மோசடி நடத்தப்படுவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் கொடுத்திருக்கிறது
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகர் போல நடித்து ஏமாற்றி பயணிகளிடம் பணம் வசூலிக்க சிலர் கிளம்பியுள்ளனர். இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. பண்டிகை நாட்களில் மெட்ரோவில் கூட்டம் நிரம்பி வழியும். மட்டுமல்லாது சென்னையில் நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலுடன் ஒப்பிடும்போது மெட்ரோ சேவையானது விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அவசரமாக செல்வதற்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக இருந்து வருகிறது.

தற்போது இரண்டு வழித்தடங்களில் இயங்கி வரும் இந்த மெட்ரோ சேவையானது மேலும் சில வழித்தடங்களில் விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக புகார் எழுந்து வருகிறது. அதாவது, டிக்கெட் பரிசோதகர்கள் என்கிற பெயரில் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு சிலர் பணம் வசூலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் 'டிக்கெட் பரிசோதகர்' என தாங்கள் யாரையும் நியமிக்கவில்லை என்று கூறியுள்ளது.
மேலும், "மெட்ரோ ரயிலுக்கு பயண அட்டைகள்/டோக்கன்கள்/க்யூ ஆர் குறியீடு போன்றவற்றின் மூலம் மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்கள் அனைத்தும் ஆட்டோமெடிக் மெஷன் மூலம் சரி பார்க்கப்படுகிறது. தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலமாக நுழைவு/வெளியேறும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மெட்ரோ இரயில் நிலையங்களில் அமைந்துள்ள கட்டண அலுவலக அறைகளில் மட்டுமே அது சரி செய்து தரப்படும். மெட்ரோ இரயில் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுவது இல்லை. இதற்காக எந்த அதிகாரிகளையும் மெட்ரோ நியமிக்கவில்லை.
ஆனால் சில தங்களை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு பணம் வசூல் செய்து வருவதாக புகார் வந்திருக்கிறது. இதுபோன்ற அநாகரிகமான, விஷமத்தனமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று செயலில் ஈடுப்படுவதாக சந்தேகப்படும் நபர்களை பயணிகள் கண்டறிந்தால் அவர்களும் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளிக்கலாம். இதுபோன்று சந்தேகப்படும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கூறிய செயலைச் செய்த நபரால் ஏமாற்றம் அடையும் நபர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு சென்னை ரயில் நிறுவனம் பொறுப்பேற்காது" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications