தாம்பரம் - நாகர்கோவிலுக்கு நவீன வசதிகளுடன் கண்ணை கவரும் புதிய ரயில்.. அலைமோதிய மக்கள் கூட்டம்
சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு, நவீன வசதிகளுடன் இயக்கப்பட்ட வாராந்திர ரயிலில் துவக்க நாளிலேயே கூட்டம் அலைமோதியது.
வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் மட்டுமே இயக்கப்படும் இந்த ரயில், உட்கிரிஸ்ட் என்ற திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிகளுடன் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன

ரயில் முழுவதும் வைபை வசதி, எல்.இ.டி., விளக்குகள், துர்நாற்றம் மற்றும் மாசு ஏற்படாத வகையில் பசுமை சூழலுடன் கூடிய பயோ டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணியரின் இருக்கைகளும், நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயணிகள் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு, திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளிலும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் இந்த நவீன ரயில் இயக்கப்படுகிறது.
இதனை மாற்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ரயிலை இயக்கினால் மிகவும் உபயோகமாக இருக்கும் என கூறியுள்ளனர். இந்த நவீன ரயில் நன்கு புதுமையாக இருப்பதாகவும், கழிவறை உட்பட அனைத்தும் நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் கூறினர்.
வாரத்தில் 3 நாட்களுக்கு இயக்கப்படும் இந்த ரயில் தாம்பரத்தில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. இதே போல நாகர்கோவிலில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
உட்கிரிஸ்ட் திட்டத்தின் கீழ் ரூ 67.75 கோடி மதிப்பில் 64 ரயில்கள் சொகுசு ரயில்களாக, தரம் உயர்த்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளன அதில் தற்போது 3 ரயில்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மீதமுள்ள 61 ரயில்கள் விரைவில் தரம் உயர்த்தப்படும். சென்னை கோட்டத்தில் இருந்து 10 ரயில்கள் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, அதில் தற்போது 2 ரயில்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications