விரைவில் ஆட்சி கவிழ்ப்பு! நிதிஷ் கூட்டணி பாஜகவுக்குத்தான் நஷ்டம்! எப்படி?
சென்னை: விரைவில் நிதிஷ்குமார் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை அணி மாறி இருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். இவர் இதுவரை 9ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். ஆட்சி மாறிவிட்டது. முதல்வர் மாறவில்லை. விரைவில் இவரது ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

ஏன் ? என்ன காரணம்? அங்கேதான் அரசியல் ட்விஸ்ட் இருக்கிறது. இவர் பாஜக கூட்டணிக்குச் சென்றதால் பாஜகவுக்குத்தான் நஷ்டம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். எப்படி? ஏன்?
"ஒரு விசயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மோடியை வீழ்த்த, 'இந்தியா' கூட்டணி எடுத்திருந்த முடிவு கூட்டணி சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது. அதன் மூலம் பலத்தை அதிகப்படுத்தி பாஜகவை வீழ்த்துவது. அதுதான் அவர்கள் திட்டம்.
இது ஒன்றும் புதிய விசயம் இல்லை. இதற்கு முன்பாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் செய்துள்ளார். அவர் 1977இல் இந்த நிலைப்பாட்டை எடுத்தார். இதில் பிரச்சினை என்னவென்றால், ஒற்றை வேட்பாளரைக் கூட்டணி சார்பாக நிறுத்துவது பல மாநிலங்களில் சாத்தியமில்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணன் முதன்முதலாகச் செய்த போதும் அவரால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
பொதுவாக 350 முதல் 400 இடங்கள் வரை பெறுவதுதான் மக்களவைத் தேர்தலில் இலக்காக இருக்கிறது. பாஜகவுக்கும் இதுதான் இலக்கு. 'இந்தியா' கூட்டணிக்கும் இதுதான் இலக்கு. இந்தக் கூட்டணி பாஜகவை வீழ்த்துமா வீழ்த்தாதா? என்பதுதான் இன்று உள்ள மிகப் பெரிய கேள்வி.

நாம் ஒரு கணக்கைப் போட்டுப் பார்ப்போம். ஒருவேளை இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் அதிக இடங்களை வென்று விடுகிறார் எனப் பேச்சுக்கு வைத்துக் கொண்டு பேசுவோம். அவர் வெற்றி பெற்றால் எங்கே போவார்? பாஜக கூட்டணிக்குப் போவாரா? வேறு வழியே இல்லை, அவர் பாஜக எதிர் அணிக்குத்தான் போக முடியும்.
மம்தா 'இந்தியா' கூட்டணியில் இல்லை என்றாலும் அவர் பாஜகவை எதிர்த்துத்தான் தேர்தலில் களம் காண உள்ளனர். அதனால் காங்கிரசுக்கு எந்தப் பாதகமும் இல்லை.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனியாக நிற்கிறது. 'இந்தியா' கூட்டணியில் இல்லை. அதனால் என்ன அவர்களுக்கும் பாஜகதான் எதிரி. 'இந்தியா' கூட்டணிக்கும் பாஜகதான் எதிரி. இருவருக்கும் பொது எதிரி பாஜகதான். அதில் சந்தேகம் இல்லை.

பஞ்சாப் மாநிலத்தில் 2019இல் மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களைக் காங்கிரஸ்தான் வென்றது. இப்போது ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. அங்கே காங்கிரஸ் ஆம் ஆத்மியுடன் நின்றால் பல தொகுதிகளை விட்டுத் தர வேண்டும். அது எப்படி சாத்தியம்? அப்படிப் பார்த்தால் காங்கிரஸ் எப்படி அரசியல் செய்ய முடியும்?
ஒருவேளை ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெல்வதாக வைத்துக் கொள்வோம். அவர் வென்றால் எங்கே செல்வார்கள்? பாஜகவுக்குப் போக வாய்ப்பு இல்லை. மீண்டும் அவர்கள் 'இந்தியா' கூட்டணிக்குத்தான் வர வேண்டும். வழியில்லை. இதைப் போலத்தான் ஹரியானாவில் தனித்து போட்டி என்கிறது ஆம் ஆத்மி. அங்கும் இதே கணக்குதான்.

ஆக, இந்த மாநிலங்களில் எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. பீகார் மாநிலத்தில்தான் பிரச்சினை. 'இந்தியா' கூட்டணி உருவானதே பீகாரில் உள்ள பாட்னாவில்தான். இப்போது அங்கேதான் முதல் பிரச்சினையை 'இந்தியா' கூட்டணி சந்தித்துள்ளது.
எனவே இது மிகப் பெரிய பின்னடைவாகத் தெரிகிறது. ஆனால், இது 'இந்தியா' கூட்டணிக்குப் பின்னடைவு அல்ல.
ஒருவேளை நிதிஷ்குமார் 'இந்தியா' கூட்டணியிலிருந்தால்தான் சிக்கல். ஏனென்றால், பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. அங்கே ஒரே கூட்டணியில் ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியும் எனப் பல கட்சிகள் இருந்தால் எப்படி இந்த 40 தொகுதிகளைப் பிரித்துக் கொள்வது? சமமாக எப்படிச் செய்ய முடியும்?

ஆர்ஜேடி அங்கே வலுவாக உள்ளது. திமுக தமிழ்நாட்டில் உள்ளதைப் போன்று ஆர்ஜேடி அங்கே உள்ளது. அவர்கள் குறைவான சீட்டுகளைப் பெற முன்வர மாட்டார்கள். அதைப் போல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மரியாதையான இடங்களை ஒதுக்கியாக வேண்டும்? எனவே அவர் வெளியேறியது பீகாரைப் பொறுத்தவரை நன்மைக்கே.
ஆர்ஜேடி உத்தரப் பிரதேசத்திலும் உள்ளது. அங்கே யாதவர்கள் ஓட்டுக் கணிச மாக உள்ளது. இங்கே 80 தொகுதிகள் உள்ளன. இங்கே பாஜக வலுவாக உள்ளது. கடந்த முறை மக்களவைத் தேர்தலில் 71 இடங்களை பாஜக வென்றது. இப்போது நிதிஷ் அங்கே சென்றுள்ளதால், உத்திரப் பிரதேசத்திலும் பாஜக சீட் வழங்க வேண்டும். அதனால் பாஜகவின் பலம் முன்பைவிட உபியில் குறையும்.

இப்போது பீகார் மாநிலத்தில் சபாநாயகராக ஆர்ஜேடி கட்சியைச் சேர்ந்தவர் இருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும். பாஜக கூட்டணிக்கு நிதிஷ் சென்றதால் அவர் செய்ய வேண்டும். ஆனால், சபாநாயகர் பதவி விலகமாட்டார்.
அவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர முடியாது. பதவி விலக வேண்டி தீர்மானம் கொண்டுவரலாம். அங்கே ஆர்ஜேடி சபாநாயகர். ஜேடி கட்சியைச் சேர்ந்தவர் துணைச் சபாநாயகர்.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஆட்சி எப்படித் தொடர முடியும்? பாஜக ஆதரவு கடிதத்தை நிதிஷ்குமாருக்கு வழங்கி உள்ளது. பாஜக எம்.எல்.ஏக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது தெரியவில்லை. அது சட்டமன்றம் கூடும் போது வெளிப்படும். அப்படி வெளிப்படும் போது அது நிதிஷ்குமாருக்கு எதிராகவும் மாறலாம். கடையில் இது ஆட்சி கவிழ்ப்பில்தான் போய் முடியும்" என்கிறார்












Click it and Unblock the Notifications