உதயநிதி மாஸ்.. தினம்தினம் அதிரடி.. பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு.. வியந்து பார்க்கும் சேப்பாக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்று ஒரு மாதங்களை கடந்து விட்டது. இந்த ஒரு மாதத்தில் திமுக அரசு விமர்சனங்களை விட பாராட்டுகளையே அதிகம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளும் திமுக அரசை பாராட்டினார்கள்.
Recommended Video
அதிமுகவும் ஓ.பி.எஸ்.சும், பாமகவின் ராமதாசும் தமிழ்நாடு அரசை அவ்வப்போது புகழ்ந்து தள்ளினார்கள். இந்த நிலையில் பதவியேற்றது முதல் மற்ற எம்.எல்.ஏ.க்களை விட மக்களிடம் அதிக கவனம் ஈர்த்து வருபவர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற பிறகு தனது சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியில் தினமும் விசிட் அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் உதயநிதி.
முதல் ஆளாக நிற்கும் உதயநிதி
தொகுதியில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களை ஆய்வு செய்து அங்குள்ள குறைகளை அதிகாரிகள் மூலம் அடிக்கடி நிவர்த்தி செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தொகுதி மக்கள் எந்த பிரச்சினையில் சிக்கி தவித்தாலும், உதவிகள் கேட்டாலும் முதல் ஆளாய் ஒடோடி போகிறார். மக்களிடம் சாதாரண மக்களை போல் எளிமையாக பழகி கவனம் ஈர்த்து வருகிறார்.
மக்களுக்கு நிவாரண பொருட்கள்
இந்த நிலையில் நேற்று சென்னை தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை உதயநிதி திறந்து வைத்தார். தியாகராயநகர் பாண்டி பஜார் பகுதியில் 98 பேருக்கு நிதி உதவித் தொகை, 1098 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். திருவல்லிக்கேணி ஜவகர் உசேன் தெருவில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து தடுப்பூசி போட்டவர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
மனுக்கள் தொடர்பாக ஆலோசனை
சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி, அங்குள்ள தேவைகளை கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொகுதி முழுவதும் சில இடங்களில் தடுப்பூசி முகாமையும் உதயநிதி தொடங்கி வைத்தார். தொகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். பல்வேறு இடங்களில் சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் முதல்வர் பொது நிவராண நிதிக்கு உதயநிதியிடம் நிவாரண தொகை கொடுத்தனர்.
உதயநிதி எங்கள் நண்பர்
ஒரு மாதமாக உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு குறித்து சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் ஒரு சிலர், '' இதுவரை எந்தவொரு எம்.எல்.ஏ.வும் ஏன் கவுன்சிலர் கூட அடிக்கடி தொகுதி பக்கம் வருவது கிடையாது. ஆனால் உதயநிதி சென்னையில் இருக்கும்போதெல்லாம் தொகுதிக்கு பக்கம் தினமும் வருகிறார். ஒரு எம்.எல்.ஏ.போல் அல்லாமல் நண்பராக மக்களிடம் எளிய முறையில் பழகுகிறார். உதயநிதி பொறுப்பேற்றது முதல் தொகுதி மக்கள் புத்துணர்ச்சி அடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.மக்கள் கூறும் கருத்துக்களை டுவிட்டர் வீடியோவில் பகிர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.