‛‛எண்ணூரில் கோரமண்டல் ஆலைக்கு இனி இடமில்லை’’.. கசிந்த அமோனியாவால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கறார்
சென்னை: எண்ணூரில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். இது குறித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்த விசாரணை நடத்தி வரும் நிலையில், விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டாக தெரிவித்திருக்கிறது.
சென்னையின் புறநகர் பகுதியான எண்ணூர் பெரியகுப்பத்தில் 'கோரமண்டல்' எனும் உர தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான அமோனியா கப்பலிலிருந்து, பைப் வழியாக ஆலைக்குள் கொண்டுவரப்பட்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதியன்று நள்ளிரவில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டபோது பைப்பில் உடைப்பு ஏற்பட்டு அமோனி காற்றில் கலந்திருக்கிறது.

இதன் காரணமாக எண்ணூரின் பெரிய குப்பம், சின்ன குப்பம் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திடீரென கண் எரிச்சல், மூசு்சு திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கின்றன. நைட் ஷிப்ட் முடித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஏராளமான மக்கள் இப்பகுதியிலிருந்து குடும்பத்துடன் வெளியேறி திருவொற்றியூர், டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
அமோனியா வாயு தாக்கியதால் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும் 6 பேர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். போபாலில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதை போல, எண்ணூரிலும் நடந்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சித்தனர். மட்டுமல்லாது கோரமண்டல் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தையும் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தானக முன்வந்து வழக்கை விசாரணையை தொடங்கி, ஆலையை ஒரு வாரக்காலத்திற்கு தற்காலிகமாக மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இன்று இந்த வழக்கு, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோரின் முன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்ததது.
விசாரணையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், "விதிகளை கடைப்பிடிக்காத கோரமண்டல் போன்ற ஆலைகள் தமிழகத்தில் இயங்க முடியாது" என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
அதாவது, "அமோனியா கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய நீரி, ஐஐடி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிபிசிஎல் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழு அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா எடுத்து சென்றதே கசிவுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், கோரமண்டல் நிறுவனம் விபத்துக்கான பொறுப்பை ஏற்க மறுக்கிறது. கோரமண்டல் நிறுவனம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதே விபத்துக்கு காரணம். எனவே, விதிகளை மதிக்காத இது போன்ற நிறுவனங்களை இனி தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரமண்டல் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications