மக்களே நோட் பண்ணிக்குங்க.. இரவில் ரயிலில் போறீங்களா.. இதையெல்லாம் பண்ணாதீங்க.. வார்னிங் தந்த ரயில்வே
இரவு ரயில் பயணத்தில் பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே நிர்வாகம்
சென்னை: இரவில் ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பயணிகள் வசதிக்காக சில அறிவுறுதல்களை ரயில்வே நிர்வாகம் வழங்கியிருக்கிறது. இந்த அறிவுறுத்தல்களின்படி பயணம் மேற்கொண்டால் பயணம் இனிமையாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறது.
உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகள் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.
இப்பயணத்தை எளிதாக்குவதற்காக ரயில்வே நிர்வாகம் தினம் தினம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் முன்பதிவு தொடர்பான மிக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இடம் இருந்தால், சாதாரண வகுப்பில் பயணிக்க டிக்கெட் வாங்கிய பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்கேற்ப கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

இடையூறு
இதனையடுத்து தற்போது முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் பின்பற்ற பட வேண்டிய சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி "இரவு 10 மணிக்கு மேல் எந்த பயணியும் சக பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக சத்தமாக பேசுவது, செல்போன்களில் பாட்டு கேட்பது, லைட் அடித்துக்கொண்டிருப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. ரயில் பெட்டியில் எரியும் லைட்களை தவிர வேறெந்த லைட்டையும் பயணிகள் பயன்படுத்தக்கூடாது. இதன் மூலம் சக பயணிகளின் உறக்கத்திற்கு இடையூறு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

அரட்டை
அதேபோல நண்பர்களுடன் பயணிப்பவர்கள் இரவு நேரங்களில் கூட்டமாக நின்றுக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு சத்தம் போட்டு சக பயணிகளின் உறக்கத்தை கெடுக்கக்கூடாது. ரயிலில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவை சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்லாது இது தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல ரயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது. இவையெல்லாம் ரயில் பயணத்தின் அடிப்படையான விதிமுறைகள் என்றாலும் இதனை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் பயணிகள் இதனை பின்னபற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

உணவு
அதேபோல ரயில் பயணத்தில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் நடுவில் உள்ள பெர்த்தை பயன்படுத்துவதில் பலருக்கும் சந்தேகம் நீடித்து வருகிறது. இதனை எந்த நேரத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். அவர்களுக்கான பதில் இதுதான். அதாவது இரவு 10 மணி தொடங்கி காலை 6 மணி வரை மட்டுமே இந்த பெர்த்தை பயன்படுத்த வேண்டும் மீதியுள்ள நேரங்களில் இதனை மடித்துவிட்டு கீழே உள்ள சீட்டில் அமர்ந்துகொள்ள வேண்டும். அதேபோல இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் உணவு விநியோகம் இருக்காது என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

புகார்
மிகக்குறிப்பாக சக பெண் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் எந்த இடத்திலும் நடந்துக்கொள்ளக்கூடாது என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. இது போன்ற அறவிப்புகள் அவ்வப்போது வந்துக்கொண்டிருந்தாலும், பயணிகள் இதனை முழுமையாக பின்பற்றுவதில்லை என்று தொடர் புகார்கள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications