சென்னையில் அடுக்குமாடி வீடுகள் கட்டும் விதிமுறைகளில் தளர்வு.. சிஎம்டிஏ மீது முறைகேடு புகார்
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான எப்எஸ்ஐ அளவை அதிகரித்திருக்கும் சிஎம்டிஏ, அதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் பெருமளவு முறைகேடுகள் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
4 மாடி கட்டடம் கட்ட ரூ.62 லட்சம் கட்டணம் வசூலித்த நிலையில் 5-வது மாடி கட்டடம் கட்ட மேலும் ரூ.1 கோடி கேட்பதாக கூறப்படுகிறது. சென்னை நகரில் நாளுக்கு நாள் கட்டடங்கள் அதிகரித்து வரும் நிலையில், குடியிருப்புகள் கட்டுவதற்கான அனுமதியிலும் அரசு மாற்றங்கள் செய்து வருகிறது.
அதன்படி கட்டட ஒழுங்குமுறை விதியின் கீழ் எப்எஸ்ஐ எனப்படும் தளப்பரப்பு குறியீட்டை 1.5-லிருந்து இருமடங்காக உயர்த்தியுள்ளது அரசு. அதாவது மனை பரப்பை போல இருமடங்குக்கு மாடி வீடுகள் கட்டி கொள்ளலாம்.
அதிருப்தி எம்எல்ஏக்களை நடு தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.. சட்டசபையில் குமாரசாமி ஆவேசம்
ஆனால் இதற்கு அனுமதி வழங்குவதில் சிஎம்டிஏ அதிகாரிகள் முறைகேடு செய்வதாக தற்போது புகார் எழுந்துள்ளது. சென்னை சேர்ந்த கட்டுமான நிறுவனர் தரை தளம் உட்பட 4 மாடி கட்டடம் கட்டுவதற்கு, சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ரூ.62 லட்சம் கட்டணமாக செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு எப்எஸ்ஐ அளவை அதிகரித்து புதிய அறிவிப்பு வந்தவுடன் கூடுதலாக ஒரு மாடி கட்ட ரூ.1 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே வாங்கிய ரூ.62 லட்சத்தை திருப்பி தர சிஎம்டிஏ மறுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்று ஏற்கனவே கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள், அல்லது ரூ.1 கோடியே 10 லட்சம் கொடுப்பதில் மேற்கண்ட தொகையை கழித்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்ததாக கட்டுமான நிறுவனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்ட சிஎம்டிஏ அதிகாரிகள், முன்பு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கவும் முடியாது. அதே போல கட்ட வேண்டிய பணத்தில் கழித்து கொள்ளவும் முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர். அதாவது புதிய விதிப்படி கூடுதலாக ஒரு மாடி கட்டடம் கட்ட ரூ.1 கோடி வசூலிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே மணல் பிரச்சனை கட்டுமான பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டுமான அனுமதியிலும் முறைகேடு நடப்பதால், மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.