30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம்: அமித்ஷா தலைமையில் தொடங்கியது.. ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தென் மாநில முதல்வர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது.
அதன்படி தற்போது நடப்பு ஆண்டுக்கான தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த கூட்டம் திருப்பதியில் நடந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்! முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசனை!
தென்மண்டல கவுன்சில் கூட்டம்
தற்போது நடைபெறும் 30-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் கலந்துகொண்டு தங்கள் மாநிலம் மற்றும் மாநில எல்லைகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். மாநில எல்லை பிரச்சினை, நதிநீர் பங்கீடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கவுன்சில் கூட்டமான மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும்.
கேரளா சென்றார் மு.க ஸ்டாலின்
இன்று காலை நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று பிற்பகலே கேரளா சென்றடைந்தார். அங்கு அவரை கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார். தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு திராவிட மாடல் புத்தகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள்
இந்த கூட்டத்தில் எல்லை தொடர்பான பிரச்சினைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், சாலை மற்றும் போக்குவரத்து, பாதுகாப்பு, எரிசக்தி, சுற்றுச்சூழல், வீட்டு வசதி உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தென் மண்டல கவுன்சில் கூட்டம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது.
அமித்ஷா தலைமையில் தொடங்கியது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இஇந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் சில அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகின்றனர்.