தமிழக சட்டசபை ஜனவரி 18-ம் தேதிக்கு மேல் கூடுகிறது... ஆளுநர் உரையுடன் தொடங்கி 3 நாட்கள் கூட்டம்..!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநரின் உரை இடம்பெறுவது மரபு. இந்த உரையின் போது அரசுக்கு பாராட்டு தெரிவித்தும், அரசு மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்தும் ஆளுநர் எடுத்துரைப்பார்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஏற்பாடுகளை சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் தேதியை இறுதி செய்வதற்கான கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் இருந்து மீண்டும் அந்த கோப்புக்கள் அரசுக்கு வந்தால் தான் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் தேதி உறுதி செய்யப்படும். இதனிடையே இந்த முறை 3 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுமா அல்லது கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறுமா என்பது பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கேரளாவை போல் தமிழக சட்டமன்றத்திலும் மத்திய அரசின் விவசாய சட்டங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தொடரில் இதனை அரசு செய்யாதபட்சத்தில் திமுக வெளிநடப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications