வடகிழக்கு பருவமழை! 26 மனித உயிரிழப்புகள்.. 29 கால்நடை உயிரிழப்புகள்! 67 குடிசைகள்.. 66 மரங்கள் சேதம்
சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதாரங்கள் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன் படி இதுவரை தமிழகத்தில் 26 மனித உயிரிழப்புகளும் 29 கால்நடை உயிரிழப்புகளும் ஏற்பட்டிருப்பதோடு 67 குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
இது தொடர்பான விவரம் வருமாறு;
இடைத்தேர்தல் சுவாரஸ்யம்.. 2வது இடத்தில் நோட்டா.. நோட்டாவுக்கு ஓட்டு போட பணம்? பரபர குற்றச்சாட்டு!
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று மனித உயிரிழப்பு பதிவாகவில்லை.
தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 29 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 67 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.
5.11.2022 முடிய பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 66 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்று (6.11.2022) விழுந்த 1 மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
நிவாரண மையங்கள்
169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 29.10.2022 முதல் 05.11.2022 முடிய மொத்தம் 2,83,961 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 819 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.
வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.6-11-2022 - பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7-11-2022 மற்றும் 8-11-2022 ஆகிய நாட்களில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9-11-2022 அன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 4.11.2022 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.
121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
1070 கட்டணமில்லா தொலைபேசி
இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 417 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 268 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 149 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 217 தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.