அடுத்த 2 நாளைக்கு வெயில் உக்கிரமாக இருக்குமாம்.. 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: இந்த மாவட்டங்களில் எல்லாம் அடுத்த 2 நாளைக்கு வெயில் உக்கிரமாக இருக்கப் போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. கோடை மழை இன்னும் எந்த பகுதியிலும் பெய்ததாக தெரியவில்லை.
தமிழகம் முழுவதுமே மக்கள் அனல் காற்று காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். வெப்பத்தை தணித்துக் கொள்ள பழச்சாறு அருந்தும் கடைகள் முன்பும், இளநீர் கடைகள் முன்பும் மக்கள் குவிந்து வருகிறார்கள். மண்டையை பிளக்கும் வெயில் காரணமாக மதிய வேளையில் வெளியில் வருவதற்கே மக்கள் அச்சப்படுகிறார்கள்.
திருப்பூரில் விஷவாயு தாக்கி கொடூரம்.. 4 வடஇந்திய இளைஞர்கள் பலி!
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை , திருவள்ளூர், தர்மபுரி, பெரம்பலூர், நாமக்கல், திருவாண்ணாமலை உள்பட 12 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளது.