தங்கத்தின் 'மேஜிக்' சொத்து! மண்ணுக்குள் கிடந்தாலும் மாறாத நிறம்.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்!
சென்னை: உலக சந்தையில் எத்தனையோ உலோகங்கள் இருந்தாலும், தங்கம் எப்போதும் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.. காலங்கள் மாறினாலும், பொருளாதார சூழல்கள் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், தங்கத்தின் மீதான மோகமும் அதன் மதிப்பும் மட்டும் ஏறுமுகமாகவே இருக்கின்றன.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? காலம் கடந்தும் ஜொலிக்கும் தங்கத்தின் ரகசியம் என்ன தெரியுமா?
ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கும் தங்கம், சாமானிய மக்களின் வாழ்வோடும் பிரிக்க முடியாத ஒரு முதலீட்டு அங்கமாக மாறியுள்ளது..

தங்கம் மின்னுதே
தங்கம் பெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள எரிமலைப் பாறைகளின் இடுக்குகளிலும், பாறை அடுக்குகளுக்கு இடையேயும் சிறிய துகள்களாகவோ, தகடுகளாகவோ அல்லது கம்பி வடிவிலோ காணப்படுகிறது.. சுரங்கங்கள் தோண்டிப் பாறைகளை வெட்டி எடுத்த பின், சிக்கலான வேதியியல் முறைகளைப் பயன்படுத்தியே தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது..
ஒரு டன் உயர்தரத் தாது மண்ணிலிருந்து சுமார் 30 கிராம் தங்கம் மட்டுமே கிடைப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.. இத்தகைய கடினமான தேடலும், அதன் சிதையாத தன்மையுமே தங்கத்தை ஆபரணமாகவும், பணமாகவும், சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் இன்றும் நிலைநிறுத்துகின்றன..
மண்ணுக்குள் கிடந்தாலும்
அழகுக்காகவும், அந்தஸ்துக்காகவும் அணியப்படும் இந்த மஞ்சள் உலோகம், ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தனது பொலிவை இழக்காமல் இருக்கிறது என்ற கேள்விக்கு அதன் வேதியியல் கட்டமைப்புதான் கரெக்ட்டான பதிலாகும்..
தங்கம் ஏன் மங்குவதில்லை அல்லது துருப்பிடிப்பதில்லை? என்று என்றாவது நாம் யோசித்ததுண்டா? அதற்கெல்லாம் சில காரணங்கள் உள்ளன.. முக்கியமாக தங்கத்தின் மந்தமான அல்லது உன்னத வேதிப்பண்புதான் காரணம்.
தங்க நகைகள் ஜொலிப்பு
இரும்பு போன்ற சாதாரண உலோகங்கள் காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ஆக்சைடுகளாக மாறி துருப்பிடிக்கின்றன.. ஆனால், தங்கம் ஆக்சிஜனுடன் எவ்வித வேதிவினையிலும் ஈடுபடுவதில்லை.. அதனால்தான் எத்தனை ஆண்டுகள் மண்ணுக்குள் கிடந்தாலும் அல்லது கடலுக்கு அடியில் இருந்தாலும், தங்கம் தனது அசல் நிறத்தையும் பிரகாசத்தையும் துளியும் இழப்பதில்லை..
இந்த அரிப்பு எதிர்ப்புத்திறன் காரணமாகத்தான், பழங்கால அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்படும் தங்க காசுகள் இன்றும் புத்தம் புதியவை போல மின்னுகின்றன..
அணு அமைப்பை பொறுத்தவரை, தங்கத்தின் எலக்ட்ரான்கள் அதன் அணுக்கருவால் மிகவும் வலிமையாகப் பிணைக்கப்பட்டுள்ளன.. வேதியியல் ரீதியாக ஒரு பொருள் வினைபுரிய வேண்டுமெனில், அது எலக்ட்ரான்களை இழக்கவோ அல்லது ஏற்கவோ வேண்டும்..
வேதியல் அதிசயம்
ஆனால் தங்கம் எலக்ட்ரான்களைப் பரிமாறிக்கொள்ள தயங்குவதால், அது மற்ற தனிமங்களுடன் சேராமல் தனித்தன்மையுடன் மிளிர்கிறது.. இதனால் அமிலங்கள் அல்லது காரங்களால் தங்கத்தை எளிதில் சிதைக்க முடிவதில்லை.. ராஜதிராவகம் போன்ற மிக வீரியமான கலவைகளால் மட்டுமே தங்கத்தைக் கரைக்க முடியும் என்பது அதன் உறுதித்தன்மைக்கு சான்றாகும்.. வேறு எதிலுமே தங்கம் கரையாது.. கலரும் மங்காது..
அதேபோல தங்கம் தேய்வதில்லை.. இப்படி தேய்மானத்திற்கு உள்ளாவதில்லை என்பதும் தங்கத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டியாகும்.. தங்கம் மென்மையான உலோகம் என்பதால், பயன்பாட்டின் போது அதன் வடிவம் லேசாக மாறலாமே தவிர, அதன் அணுக்கள் காற்றில் கரைந்தோ அல்லது சிதைந்தோ போவதில்லை.. இதனால்தான் மறுசுழற்சி செய்யப்படுவதற்கு மிகவும் ஏற்ற உலோகமாக தங்கம் கருதப்படுகிறது..
அவ்வளவு ஏன், இன்று நாம் அணியும் நகையில் இருக்கும் தங்கம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு அரசர் பயன்படுத்திய தங்கமாகவும் இருக்க வாய்ப்புண்டு.. இத்தகைய அழியாத தன்மை, துருப்பிடிக்காத மேன்மை மற்றும் தேயாத பண்புகளே தங்கத்தை ஒரு விலைமதிப்பற்ற சொத்தாக உலக அரங்கில் நிலைநிறுத்துகின்றன..












Click it and Unblock the Notifications