நாங்க எதிர்த்தப்ப ஏன்னு கேள்வி கேட்டாங்க.. இன்று ஒட்டுமொத்த நாடே எதிர்க்கிறது.. விளாசிய ஸ்டாலின்!
சென்னை: நீட் தேர்வை நாம் எதிர்க்க தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் கேட்டார்கள். ஆனால், இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில், நீட் தேர்வை எதிர்க்கிறது எனக் கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இன்று முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "என்னைப் பொறுத்தவரை நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடைகளை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி!
நீட் தேர்வை நாம் எதிர்க்க தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் எதிர் கேள்வி கேட்டார்கள். ஆனால், இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கின்ற முறைகேடுகளை பார்த்து, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கின்றது. மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகின்றது. பல மாநில முதலமைச்சர்கள், தேசிய தலைவர்கள் நீட் வேண்டாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏன்? ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில், நீட் தேர்வை எதிர்க்கின்றது!
மத்திய பா.ஜ.க அரசு அரசியலுக்காக இப்போது, நெருக்கடி நிலையை பற்றி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறார்கள். ஆனால், நாம் அவர்களிடம் கேட்கின்ற கேள்வி நெருக்கடி நிலை காலத்தில், ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கபூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?
நம்மை பொறுத்தவரை, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை தேவையற்றது. அதை எதிர்க்கிறோம். ஒருபக்கம் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறோம். இன்னொரு பக்கம் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்விக்கும், கல்லூரிகளுக்கும், உயர்கல்விக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம். எனவே, "தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், நான் திரும்பவும் சொல்கிறேன், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து, அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாகவேண்டும்.
மாணவச் செல்வங்களே! "படிங்க... படிங்க... படிங்க... நீங்கள் உயர படிங்க.. நீங்கள் உயர... உங்கள் வீடும் உயரும்! இந்த நாடும் உயரும்!" என்று உங்களையெல்லாம் மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன்." என உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.











Click it and Unblock the Notifications