பண்டிகை காலத்தில் இப்படியா செய்வாங்க.. தாம்பரத்தில் 48 மணி நேரம் நடந்த மிகப்பெரிய குழப்பம்
சென்னை: சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மக்கள் மொத்தமாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர். நகரங்களை விட்டு வெளியேறியபடி இருந்ததால் தாம்பரத்தில் நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த சூழலில் தாம்பரத்தில் யார்டு பராமரிப்பு பணி சுதந்திர தினத்தின் போதும் தொடர்ந்தது.. நிலைமையை மிகவும் மோசமாக்கியது. ரயில்கள் ரத்தால் மக்கள் பெரும் சிக்கலை சந்தித்தனர். .
சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு பலரும் சென்னையைவிட்டு வெளியே பிற நகரங்களுக்கு சென்ற காரணத்தால், தாம்பரம் மாநகரம் தொடர்ந்து 48 மணி நேரம் மூச்சுக்கூட விடமுடியாத அளவிற்கு பரபரப்பான நிலையை சந்தித்தது. நிலைமை இப்படி இருக்க தாம்பரத்தில் யார்டு புனரமைப்பு பணியை எளிதாக்கும் விதமாக , ரயில்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் விரைவு ரயில் பயணிகளை செங்கல்பட்டில் போய் ஏற சொன்னது நிலைமையை மிகவும் மோசமாக்கியது.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் வழியாக புறப்பட்டுச் சென்றாலும் நிற்கவில்லை.. இதனால் சென்னை மாநகரின் தெற்குப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் செங்கல்பட்டு சென்று ரயில்களைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏற்கனவே சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பேட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவைகள் மிகப்பெரிய அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்லாவரம், தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரியில் இருந்து 70 கூடுதல் சேவைகளை எம்டிசி இயக்கியது. இந்த பேருந்துகளை மட்டுமே நம்பியிருந்த பயணிகள் பெரும் அவதிப்படும் நிலை இருந்தது.
ஏனெனில் பொதுமக்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் அதிகரிப்பு காரணமாக இந்த பேருந்துகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கின. பேருந்துகளில் சென்று செங்கல்பட்டு போய் ரயிலை பிடிக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டனர். புதன்கிழமை இரவு குரோம்பேட்டைக்கும் செங்கல்பட்டுக்கும் இடையே பயணிக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனதாக பயணிகள் கூறினார்கள்.
ஆட்டோ ஓட்டுநர்களும் இந்தச் சூழலை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தனர் என்றும் குற்றம்சாட்டினார்கள் மக்கள். இதனிடையே புதன்கிழமை இரவு நேரம் ஆக, ஆக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கிளம்பாக்கத்திற்குச் செல்லஆட்டோ ஓட்டுர்கள் மறுத்தார்கள் என்றும், இதனால் பயணிகள் வேறு வழியின்றி மாநகர பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது என்றும் கூறினார்கள்.
இதனிடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பல தனியார் பேருந்து நடத்துனர்கள் டிக்கெட் கட்டணத்தை இரட்டிப்பாக்கினார்கள் என்றும் கூறப்படுகிறது. மதுரை போன்ற நகரங்களுக்கு புதன்கிழமைஇரவு செல்ல 3,500-க்கும் மேல் கட்டணம் கேட்கப்பட்டதாக கூறப்படுகறித. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சில பேருந்துகளில் சோதனை நடத்தியதுடன் ரூ. 50,000 அபராதம் விதித்த போதிலும், பெரும்பாலான பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒவ்வொரு பண்டிகை மற்றும் முக்கிய விடுமுறை நாட்களில் இந்த ஆய்வு நாடகம் வெறும் கண்துடைப்புதான் என்று கூறும் பயணிகள், ரெட்பஸ் மற்றும் அபிபஸ் போன்ற ஆப்ஸ் மற்றும் இணையதளங்களில் பேருந்துக் கட்டணம் வெளிப்படையாகக் காட்டப்படுவதாக கூறினார்கள். சுதந்திரதின பண்டிகையின் போது நடந்தது போல், தீபாவளி, ஆயுத பூஜை மற்றும் ஓணம் பண்டிகையின் போது ரயில் போக்குவரத்தில் குழப்பங்கள் ஏற்பட்டால் பெரிய சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே குழப்பம் இல்லாமல் பயணிகள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications