தியேட்டர்களில் 100%.. விஜய்க்கு சக்ஸஸ்தான்.. ஆனால் வெண்ணை திரண்டு வரும்போது.. தாழியை உடைக்கலாமா!
தியேட்டர்களில் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது
சென்னை: ஒருவழியாக விஜய் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றிவிட்டார்.. ஆனால், 100 சதவீத தியேட்டர்களுக்கு அனுமதியால் மிகப் பெரிய ஆபத்து வரப்போகிறது.. கொரோனா பரவல் உச்சத்தை எட்டக் கூடிய அபாயம் இருக்கிறது என்பதை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.
Recommended Video
கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.. தியேட்டர் சம்பந்தமாகத்தான் இவர்கள் பேசினார்கள் என்றாலும், எதற்காக ரகசியமாக பேசினார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்த நிலையில், 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டு கோரிக்கையும் விடுத்தார் விஜய்.
விஜய் இப்படி கேட்டதுமே அதற்கு கிட்டத்தட்ட முதல்வர் ஓகே சொல்லிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.. அதன்படியே இன்று அரசு அறிவிப்பும் வெளியாகி விட்டது..!
இனிதான் சிக்கலே.. அதிரடி லிஸ்ட்டை கையில் எடுத்த பாஜக.. மிரண்டு போன அதிமுக.. என்னாகும்?
கொரோனா பிரச்சனை
ஆனால், இதன் விபரீதத்தை முதல்வர் - விஜய் இரு தரப்புமே சரியாக அணுகவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.. 'கொரோனா பிரச்சனை இந்த 6 மாசமாக இருக்கிறது.. அதேபோல தியேட்டர்கள் திறப்பு தொடர்பாக இதுவரை எதுவும் பேசாமல் இருந்த விஜய், இப்போது தன்னுடைய படம் ரிலீஸாகிறது என்றதும், தன்னுடைய படத்தை ஓட வைப்பதற்காகவும், வசூலை எடுப்பதற்காகவும் முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறாரே, இது சரியா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
50 சதவீத இருக்கை
தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்றுதானே அன்னைக்கு அரசு 50 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்திருக்கிறது.. அப்படி இருக்கும்போது, இப்போது இன்னும் கொரோனா முழுசா போகவில்லை.. வீரியம் அதிகமாக உள்ளது.. தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தபடியேதான் இருக்கிறது.. தடுப்பூசியே இப்போதுதான் வந்துள்ளது, அதுவும் டெஸ்ட் செய்யப்பட்டுதான் வருகிறது... இந்த நேரத்தில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டிருப்பதும், அதற்கு அரசு செவிசாய்திருப்பதும், ரசிகர்களுக்குதானே கொரோனா எளிதில் பரவும்?
முயற்சிகள்
ரசிகர்களின் மீது அக்கறை இல்லாமல் வசூலை மட்டுமே விஜய் நோக்கமாக கொண்டுள்ளது சரியா? அதேபோல, இவ்வளவு மாதமாக இதே கொரோனாவுக்காக பலவித முயற்சிகளை மேற்கொண்டு வந்த தமிழக அரசு, இப்படி கடைசி நேரத்தில் அனுமதி தந்துவிட்டால், மறுபடியும் அரசுக்கு சிக்கல் வராதா? தேர்தல் சமயத்தில் அது எதிரொலிக்காதா? என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
கோரிக்கை
விஜய் வைத்த கோரிக்கையினால் நன்மைகள் இருப்பதாகவே எடுத்து கொள்வோம்.. அதன்மூலம் எத்தனையோ தியேட்டர் அதிபர்கள், ஊழியர்கள் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள் என்றே எடுத்து கொள்வோம்.. அதற்காக பலனடையும் வெறும் ஆயிரக்கணக்கானவர்களுக்காக , லட்சோபலட்ச ரசிகர்களுக்கு தொற்றை பரவுவதை ஏற்கவே முடியாது.. அப்படி என்றால், கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை, தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழியணுமா? என்ற கேள்வியை நம்மால் கேட்காமலும் இருக்க முடியவில்லை.
வெண்ணை
100 சதவீதம் இருக்கைகளுடன் தியேட்டர்களை நிரப்பி கொண்டால், தியேட்டர் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள்.. விநியோகஸ்தர்கள் லாபம் சம்பாதிப்பார்கள்.. இவர்களால் விஜய் லாபம் சம்பாதிப்பார்.. விஜய்யால் முதல்வர் தரப்பு ஏதேனும் மறைமுகமாக லாபம் சம்பாதிக்கும்.. ஆனால் கடைசியில் பாதிக்கப்பட போவதோ என்னவோ அப்பாவி மக்கள்தான்.. தொற்று குறையும் முன்பேயே, அதாவது வெண்ணை திரண்டு வரும்போது, அதன் தாழியை உடைத்துவிட்டனர் முதல்வர் தரப்பும் விஜய் தரப்பும் ..!
முன்னணி
கொரோனா ஒழிப்பில் நாட்டிலேயே முன்னணியில் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். சிகிச்சையில் ஆகட்டும், தொற்றைக் கண்டுபிடிப்பதில் ஆகட்டும், சோதனைகள் நடத்துவதிலாகட்டும் தமிழ்நாட்டை பலரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இப்படி தியேட்டர்களை முழுமையாக திறந்து விட்டால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்.
அவப்பெயர்
பெரும் கூட்டம் கூடும்போது நிச்சயம் தொற்று வேகமாக பரவக் கூடிய அபாயங்கள் உள்ளன. அப்படி பரவினால் அத்தனை அவப் பெயரும் முதல்வருக்கே போய்ச் சேரும். எனவே அதிலிருந்து தப்ப இந்த தவறான முடிவை முதல்வரும், தமிழக அரசும் மாற்றிக் கொண்டால்தான் கெட்ட பெயர் ஏற்படுவதிலிருந்தும் தப்ப முடியும், மக்களையும் காக்க முடியும். இல்லாவிட்டால் சினிமாக்காரர்களுக்காக மக்களைக் கைவிட்ட எடப்பாடியார் என்ற அவப் பெயர்தான் மிஞ்சும்.