திடீரென முதல்வரின் கான்வாய்க்குள் புகுந்த பைக்.. இளைஞர் கைது- அப்புறம் காத்திருந்த ‘பகீர்’ ட்விஸ்ட்!
சென்னை : சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்களை பைக்கில் முந்த முயன்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் ஓட்டி வந்த பைக் திருடப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.
அஜித்குமார் என்பவர் ஓட்டிச் சென்ற நம்பர் பிளேட் இல்லாத பைக் திருடப்பட்டது என தெரியவந்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருட்டு பைக்கில் முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களை இளைஞர் ஒருவர் முந்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் கான்வாய்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மதியம், தலைமை செயலகத்தில் இருந்து தனது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கிளம்பினார். முதல்வரின் காருக்கு முன்பும் பின்பும் வழக்கமான பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்தபடி சென்றுள்ளன.

குறுக்கே புகுந்த பைக்
முதல்வரின் கான்வாய் சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேப்பியர் பாலத்தை கடந்து சென்ற நிலையில் திடீரென சாலையில் எதிர்த்திசையில் இருந்து ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் திடீரென குறுக்கே வந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தனர்.

திருட்டு பைக்
அந்த இளைஞர் ஓட்டி வந்த ஆக்டிவா பைக்கில் நம்பர் பிளேட் இல்லை. இதனால் சந்தேகமடைந்து துரிதமாக செயல்பட்ட போலீசார் அவரிடம் பைக்கை பறிமுதல் செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். விசாரணையில், அஜித்குமார் என்ற அந்த நபர் ஓட்டிச் சென்ற நம்பர் பிளேட் இல்லாத பைக் திருடப்பட்டது என தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து அந்த இளைஞரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, ஆழ்வார்பேட்டையிலும், முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் வாகனங்களை பைக்கில் முந்திச் செல்ல முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications