தேனி சீட் யாருக்கு? அமமுகவுக்கு எத்தனை சீட்? கூலாக டிடிவி தினகரன் சொன்ன பதிலை பாருங்க!
சென்னை: பாஜக கூட்டணியில் தேனி தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு சிரித்தபடி பதில் அளித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அண்ணாமலை, ஓபிஎஸ் உடன் இன்று ஒரே மேடையில் பங்கேற்றார் டிடிவி தினகரன்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணியில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். இன்னும் சீட் பங்கீடு உறுதி செய்யப்படவில்லை.

பாஜக கூட்டணியில் அமமுக: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மேற்கொண்டார். சென்னை - கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், நள்ளிரவு நேரத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சென்னையில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பாஜக கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
ஒரே மேடையில் பாஜக கூட்டணி தலைவர்கள்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன், காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சைமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அப்போது பேசிய அவர், "என்.டி.ஏ கூட்டணியில் நாங்கள் இணைந்த பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சியே இப்தார் நோன்பு நிகழ்ச்சி என்பதில் எங்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியாக உள்ளது." என்றார்.
தேனி தொகுதி யாருக்கு?: அப்போது செய்தியாளர்கள், தேனி தொகுதியை அமமுக, ஓபிஎஸ் தரப்பு இருவருமே கேட்டு வருவதால் பாஜக ஒதுக்கத் தயங்குவதாக கூறப்படுகிறதே எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்தபடி பதில் அளித்த டிடிவி தினகரன், "சும்மா இப்படி எல்லாம் போட்டு வாங்காதீங்க.. சீட் பகிர்வில் பிரச்சனையே இல்லை.
சீட் பங்கீடு அறிவிக்கும்போது அந்த தொகுதி யாருக்கு வருகிறது என்பது தெரியும். அதுவரை அது சஸ்பென்ஸ் ஆக இருக்கட்டும். ரொம்பவே இணக்கமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற அமமுக பாடுபடும்" என்றார்.
39 சீட்களையும் விட்டுக்கொடுக்க தயார்: தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், தேனி தொகுதியை விட்டுக்கொடுக்க நீங்கள் தயாரா என கேள்வி எழுப்பினார். அதற்கு டிடிவி தினகரன், "39 தொகுதிகளையும் நாங்கள் விட்டுக் கொடுக்க தயார் தான். அது எல்லா தலைவர்களுக்கும் தெரியும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "சிஏஏ என்பது சிறுபான்மை மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல, குடியுரிமையை கொடுக்கும் சட்டம். பாஜக ஏதோ தீய சக்தியைப் போல, சிறுபான்மை மக்களுக்கு எதிரிகளைப் போல எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. மதத்தின் பெயரால் பொய் பரப்புரை செய்பவர்களுக்கு பதில் சொல்லும் தேர்தலாக இது இருக்கும். சிறுபான்மை மக்களின் ஆதரவோடு தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு வெற்றியை ஈட்டித் தருவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications