"எங்களுக்குதான் ஓட்டு.." "உங்களால்தான் உள்ளதே போச்சு.." மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு
சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்க நடைபெற்ற அதிமுக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே எந்த முடிவும் எட்டப்படவில்லை.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளான பாமக 5, பாஜக 4 என கைப்பற்றினர்.
அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில்தான், சட்டசபை எதிர்கட்சித் தலைவர் யார் என்பதைத் தேர்வு செய்வதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை.. தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல சீனியர் தலைவர்கள், இந்த கூட்டத்தில், கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொந்தளிப்பு
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது அதிமுக. ஆரம்பத்தில் தயங்கினாலும், பிறகு ஓபிஎஸ் இதற்கு ஒப்புக் கொண்டார். எனவே இயல்பாகவே எடப்பாடி பழனிச்சாமிதான் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதுதான் துவக்கத்தில் இருந்த எதிர்பார்ப்பு. ஆனால் கூட்டத்தில் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டதாம்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாதம்
எதிர்க்கட்சி தலைவராக ஓபிஎஸ்சை நியமிக்க வேண்டும், அவர்தான் ஏற்கனவே ஜெயலலிதா அவைக்கு வராத காலகட்டங்களில் அதிமுக குழுவை வழி நடத்தியவர்.. அதுவும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதிமுக குழுவிற்கு தலைமை தாங்கியவர். அப்படியான அனுபவம் உள்ளவரை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்பது ஓபிஎஸ் தரப்பினர் வாதமாக இருந்துள்ளது.
எடப்பாடியார் அனுபவம்
ஆனால், எடப்பாடி தரப்போ, அது பழைய கதை என ஒரே போடாக போட்டுள்ளனர். எடப்பாடியார் தொடர்ந்து முதல்வராக இருந்து அனுபவம் பெற்றுள்ளார். எதிர்க்கட்சி பலமாக இருந்தபோதும் எளிதாக சமாளித்தார். எனவே, எடப்பாடியாருக்கு எதிர்க்கட்சி தலைவராக இருப்பது பெரிய விஷயமே இல்லை என்று வாதிட்டுள்ளனர்.
மக்கள் ஓட்டு யாருக்கு
இப்படியாக போன விவாதம் ஒரு கட்டத்தில், உச்சகட்டத்தை எட்டிவிட்டது. அப்போதுதான் தேர்தல், வெற்றி தோல்வி பற்றி பேச்சு எழுந்துள்ளது. கோவை, தருமபுரி மாவட்டம் முழுக்க அதிமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. சேலம், திருப்பூர், ஈரோடு என மேற்கு மண்டலத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. தோற்ற தொகுதிகளிலும் ஆயிரம் அல்லது அதற்கு குறைவான ஓட்டுக்களில்தான் தோற்றுள்ளது. மேற்கு மண்டலம் இப்படி இருக்கும் நிலையில், தென் மண்டலம் மற்றும் டெல்டா, சென்னை மண்டலத்தில் மோசமாக தோற்றுள்ளது அதிமுக. எனவே எடப்பாடியாருக்காகத்தான் ஓட்டு கிடைத்துள்ளது. மக்களின் தேர்வை மதித்து அவரைத்தான் எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என கூற, கொதித்து போயுள்ளது ஓபிஎஸ் தரப்பு.
உள் இட ஒதுக்கீடு
எடப்பாடி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் வன்னியர்களுக்கு 10.5 உள் இட ஒதுக்கீட்டை வழங்கினீர்கள். அதன் காரணமாக பிற மண்டலங்களில் பிற சாதியினர் அதிமுகவுக்கு எதிராக அணி திரண்டு விட்டனர். எனவேதான் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. உங்கள் முடிவுதான் தோல்விக்கு காரணமே தவிர, இதற்கு பன்னீர்செல்வம் பொறுப்பாக முடியாது. அதுமட்டும் கிடையாது.. எத்தனைவாட்டிதான் எங்கள் தரப்பே பதவிகளை விட்டுத்தருவது, இனி முடியாது.. என்று கொந்தளித்து பேசியுள்ளது இந்த தரப்பு.
விடாப்பிடி
இப்படியாக இருதரப்பும் விடாப்பிடியாக இருந்ததால் அப்படியே கிளம்பி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பிவிட்டனர் அதிமுக எம்எல்ஏக்கள். கூட்டம் மே 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் உள் இட ஒதுக்கீட்டால்தான் ஓட்டு போனது என்றும், உள் இட ஒதுக்கீட்டால்தான் ஓட்டு வந்தது என்றும், மாறி மாறி ஒரே பிரச்சினையை பேசி வருவதால் இழுபறி நீடிப்பதாக சொல்கிறது அதிமுக வட்டாரம்.