கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் தள்ளுபடியா? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் தள்ளுபடி என வெளியான தகவல் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை மதுரவாயலில், மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழாவில் பங்கேற்று கடனுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பரவி வரும் தகவல் தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
வங்கியில் உள்ள கடனை விவசாயிகள் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக்கடனை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கையில், நகைக் கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
கடுமையான வறட்சி மற்றும் பொய்த்துப்போன குறுவை சாகுபடி உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அரசு தலையிட்டு கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் நகைக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.