1 கோடி வீடுகளுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.. மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 4.83 சதவீதம் வரை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு ஜூலை 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு: அதன்படி, வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தி வருவோருக்கு முன்பு ஒரு யூனிட்டுக்கு 4.60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த மின்கட்டணம் இனி 4.80 ரூபாயாக வசூலிக்கப்படும். அதிகபட்சமாக 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 11.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 11.80 ரூபாய் வசூலிக்கப்படும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கட்டண உயர்வு?: 50 யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் 9 ரூபாய் 70 காசுகளில் இருந்து இனி 10 ரூபாய் 15 காசுகளாக உயர்கிறது. புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை மற்றும் குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு கல்வி நிறுவனம், மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் 7 ரூபாய் 15 காசுகளில் இருந்து 7 ரூபாய் 50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் வந்ததுமே, திமுக அரசு மக்கள் வயிற்றில் அடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

1 கோடி நுகர்வோருக்கு எந்தவித மாற்றமும் இல்லை: இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
5 ரூபாய் மட்டுமே அதிகம்: மேலும், 63 லட்சம் பேருக்கு மாதம் ரூ. 5 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும். 35 லட்சம் நுகர்வோருக்கு மாதம் ரூ. 15 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும். 25 லட்சம் நுகர்வோருக்கு மாதம் ரூபாய் 25 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும். 13 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ. 40 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இலவச மின்சாரம் தொடரும்: மேலும், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் மற்றும் குடிசை வீட்டு இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களும் பயனடைவார்கள் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications