அண்ணாமலைக்கும், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் வித்தியாசமில்லை.. கொந்தளித்த தவெக ராஜ்மோகன்!
சென்னை: டாஸ்மாக் ஊழல் தொடர்பான பாஜக தரப்பில் நேற்று முந்தைய நாள் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்திற்கு முன்னதாக பாஜக முக்கிய தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நாடகமாடுவதை விட்டுவிட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்கூல் பசங்களை போல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தவெக தங்களின் லிமிட்டை கிராஸ் செய்யக் கூடாது. நான் களத்தில் இருந்து போராடி கொண்டிருக்கிறேன் என்று காட்டமாக பதில் அளித்தார்.

நடிகர் விஜய் மற்றும் தவெக-வை அண்ணாமலை கடுமையாக விமர்சித்தது அக்கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தமிழக பாஜக மற்றும் அண்ணாமலை ஆகியோர் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் பேசுகையில், ஒவ்வொரு நாளும் தவெக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். கோவை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களாக போராடி வந்துள்ளோம். அதேபோல் போராட்டம் என்பது வேறு, இப்படி அசிங்கமாக பேசுவது என்பது வேறு.
அண்ணாமலை சமநிலை குலைந்து, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார். சினிமாவில் எவ்வளவோ உள்ளது. உங்களுக்கு இடுப்பை கிள்ளுவதுதான் நினைவுக்கு வருமா? சரத் குமார், டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்டோர் எங்கிருந்து வந்தவர்கள்? அவர்களுடன் பிரச்சாரத்தில் நடனமாடியது மறந்துவிட்டதா? பேசும் போது ஒவ்வொரு வார்த்தைகளிலும் அண்ணாமலை கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு மாநிலத் தலைவராக அண்ணாமலை நாகரீகமாக பேச வேண்டும். அண்ணாமலையின் பேச்சை பாஜகவில் உள்ள வானதி சீனிவாசன் ஏற்றுக் கொள்வாரா? பத்திரிகையாளர்களை அவர் எப்படி மோசமான பேசினார்? திமுக ஃபைல்ஸ் என்று ஒரு தகர டப்பாவை தூக்கி கொண்டு வந்தார். அதில் என்ன நடந்துள்ளது? இப்போது டாஸ்மாக் ஊழல் ரூ.1000 கோடி என்பது கையளவு தண்ணீர் என்று நாங்கள் கூறியுள்ளோம்.
டெல்லி, சட்டீஸ்கர், தெலங்கானாவில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொண்ட பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு பெயர்தான் செட்டிங்.. பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக - பாஜக இடையில் எதிர்ப்பதை போல் எதிர்த்து, உள்ளுக்குள் பேசி கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவின் ஹேமாமாலினி, நடிகை கங்கனா ரணாவத் ஆகியோர் இடுப்பு கிள்ளி அரசியல் செய்துதான் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்களா? கர்நாடகாவில் சட்டசபையில் இருந்து ஆபாசம் பார்த்தார்கள். பாலியல் தொல்லை கொடுத்ததாக விளையாட்டு வீராங்கனை தெருவில் இறங்கி பாஜகவுக்கு எதிராக போராடினார்? இவர்கள் பேசலாமா..
அண்ணாமலை தொடர்ச்சியாக அனைவரையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். இதனை அவர் நிறுத்தி கொள்வது அவருக்கும் நல்லது, அவரின் அரசியலுக்கும் நல்லது. அண்ணாமலைக்கும், திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் என்ன வித்தியாசம்? இதுபோன்று அண்ணாமலை மீண்டும் பேசாமல் இருப்பது நல்லது என்று கண்டித்துள்ளார்.












Click it and Unblock the Notifications