விஜய் ஜேசுதாஸ் வீட்டில் கொள்ளை போன ரூ.60 லட்சம் .. வழக்கில் இடியாப்ப சிக்கல்.. போலீஸ் முக்கிய முடிவு
சென்னை: பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.
பழம்பெரும் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார். சில படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் தனுசுடன் மாரி படத்தில் நடித்துள்ள விஜய் யேசுதாஸ் சென்னை அபிராமபுரம், 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா, சென்னை அபிராமபுரம் காவல் நிலையில் நகைகள் காணாமல் போனதாக கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் யேசுதாஸ் மனைவி தனது புகாரில், 'வீட்டில் உள்ள நம்பர் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் காணாமல் போயிருக்கிறது, கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரியிருந்தார். இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தார்கள்.
அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் (தற்போது டிஜிபி) உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த நகை கொள்ளை வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள்.
விஜய் யேசுதாஸ்வீட்டு நகை கொள்ளை வழக்கில் குற்றவாளி யார் என்பதை போலீசாரால் உறுதிபடுத்த முடியாத நிலை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. பல்வேறு சந்தேக கோணங்களில் விசாரணை நடந்து வந்தது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அப்போது கூறும் போது, "2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி லாக்கரில் நகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் லாக்கரை திறந்து பார்த்தபோது, நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அப்போது புகார் கொடுக்காமல், ஒரு மாதம் கழித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதனிடையே நகைகளை வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரர்கள் கை வைத்திருக்கலாம், என்ற சந்தேகத்தில் போலீசார் கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் வேலைக்காரர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது.
ஆனாலும் வழக்கை முடிக்காமல், வேறு பல கோணத்தில் விசாரித்தார்கள் இருந்தாலும் குற்றவாளிகள் பற்றி எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம், என்று போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். கண்டு பிடிக்க முடியாத வழக்காக நீதிமன்றத்தில் அறிவித்து விட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications