"சில அறிவிலிகள் பகல் கனவு காண்கிறார்கள்.. திமுக வரலாறு தெரியல”.. ஸ்டாலின் மறைமுக அட்டாக்!
சென்னை: "திமுகவின் வரலாறு தெரியாமல் சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கின்றனர். இன்னும் சில அறிவிலிகள் திமுகவை போல வெற்றி பெறலாம் என பகல் கனவு காண்கின்றனர். திமுகவை போல வெற்றி பெற திமுகவைப் போல அறிவும், உழைப்பும் தேவை. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுகதான்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழாவையொட்டி நடைபெறும் அறிவுத் திருவிழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அறிவுத் திருவிழாவில் "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "1969ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்த சாதனை படைத்தது திமுக. ஏதோ கட்சியை தொடங்கினோம்; அடுத்த முதல்வர் நான்தான் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றினார்கள். எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சிறை வாழ்க்கைகள்.
திமுகவினர் உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல. சரிபாதி மக்கள் படிப்பறிவு பெற்றிராத காலகட்டத்தில் பாமர மக்கள் மத்தியிலும் அரசியலை விதைத்தது திமுக. திமுகவை தொடங்கியவர் அண்ணா, கட்சியைக் கட்டிக் காத்தவர் கலைஞர். இவ்விழாவிற்கு அறிவுத் திருவிழா என்று துணை முதலமைச்சர் உதயநிதி பொருத்தமான பெயர் வைத்துள்ளார். இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை அதிகம்.
திமுகவின் வரலாறு தெரியாமல் சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கின்றனர். இன்னும் சில அறிவிலிகள் திமுகவை போல வெற்றி பெறலாம் என பகல் கனவு காண்கின்றனர். திமுகவை போல வெற்றி பெற திமுகவைப் போல அறிவும், உழைப்பும் தேவை. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுகதான். திராவிடம் வெல்லும்; அதை காலம் சொல்லும். இது கூடி கலையும் கூட்டம் அல்ல; காலம் தோறும் கூர்தீட்டும் கூட்டம். அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications