2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
சென்னை: ரஜினிகாந்த் வாக்களித்து விட்டு கருத்து சொல்லாமல் கப்சிப் என்று போனது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதைக் கடமையாக வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஆகவே, அவர் வந்து வாக்களித்து விட்டு செல்லும் வரை பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது.

அதுவும் தேர்தல் காலங்கள் வந்துவிட்டால், 'ரஜினி வாய்ஸ்' பற்றி ஊடகங்கள் உற்று கவனிக்கத் தொடங்கி விடும். அவரும் சில பஞ்ச் டயலாக்குகளை சொல்லி கொஞ்சம் பரபரப்பை உண்டாக்கிவிடுவார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர் பாஜக ஆதரவாக உள்ளார் என்று பலரும் கூறிவந்தனர். ரஜினியும் அவரது பாணியில், 'ஒருவரை எதிர்த்து பத்து பேர் நிற்கிறார்கள் என்றால், அப்போது யார் பலசாலி? அந்த ஒருவரா? இல்லை அந்தப் பத்து பேரா?' என்று பூடகமான வழிகளில் மோடியை ஆதரித்து பேசி வந்தார்.
ஆகவே, அவர் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர ஆதரவாக உள்ளார் என்று பலரும் ஊகித்தனர்.
அதன்படி 2019இல் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்னால் ரஜினிகாந்த் அவரது வீட்டின் முன் ஊடகத்தினரை சந்தித்தார்.

அப்போது அவர், "நான் என் அரசியல் நிலைப்பாட்டை ஏற்கெனவே சொல்லிவிட்டேன். அதில் எனக்கு எந்த மாற்றமும் கிடையாது. இதற்கு மேல் இதைப் பற்றி நான் எதையும் பேச விரும்பவில்லை.
தயவு செய்து ஊடகங்கள் இதை பெரியதாக்கி நமக்குள் உள்ள நட்பை கொடுத்துவிடாதீர்கள்" என்று கூறிவிட்டு காரில் ஏற போனார்.
அப்போது ஆங்கில ஊடகத்தை சேர்ந்த ஒருவர் திடீரென்று 'மோடி' என்று கேள்வியைத் தொடங்கினார். இனிமேல் பேசவேண்டாம் என்றவர், சட்டென்று அமைதியாக அந்தச் செய்தியாளரை மட்டும் உற்றுக் கவனித்தார்.
அதன்பின்னர் மீண்டும் பாஜகவுக்கு ஆதரவாக பேச தொடங்கினார். ரஜினிகாந்த் அன்று என்ன சொன்னார் தெரியுமா?
"பாஜக நேற்றுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நான் ரொம்ப நாளாக நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறேன்.

வாஜ்பாய் கனவு கூட அதுதான். அவர் பிரதமராக இருந்தபோது அவரைச் சந்தித்து இது குறித்து பேசினேன். இது பெரிய புராஜெக்ட். இதற்கு பகீரதயோஜனா என்று பெயர் வையுங்கள் என்று கோரிக்கை வைத்தேன். அவருக்கும் பெயர் பிடித்திருந்தது. பகீரதம் என்றால் சாத்தியமாகாததை சாத்தியமாக்குவது என்று அர்த்தம்.
பாஜக தேர்தல் அறிக்கையில் நாட்டின் நதிகளை இணைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஒரு ஆணையம் உருவாக்குவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அது வரவேற்கதக்கது.
என்டிஏ ஆட்சி மீண்டும் அமைத்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் நாட்டின் வறுமை பாதியாக குறைந்துவிடும். நாட்டில் பலரும் பிழைப்பார்கள்" என்றார்.
ஆனால், இதுவரை நதிகளை இணைப்பதற்கு ஆணையம் இல்லை. அது பற்றி ஒரு வார்த்தைகூட பேசியதில்லை பாஜக. சொல்லப்போனால் கடந்த 5 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் ரஜினியின் கனவுத் திட்டத்தை கண்டு கொள்ளவே இல்லை.

கடந்த முறை மிகத் தீவிரமாக பாஜகவுக்கு குரல் கொடுத்த ரஜினி, இந்த முறை ஓட்டு போட்டு விட்டு கப்சிப் என்று போய்விட்டார்.
வாக்களிப்பதற்கு முன்னதாக, வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்தக் கட்சியையும் ஆதரிக்காமல் தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக கருத்து சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார்.
வீட்டின் முன் பேசிய ரஜினி, "வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டுபோட்டோம் என்பதில்தான் கவுரவம், மரியாதை எல்லாம் உள்ளது. ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவமும் இல்லை" என்று கூறினார்.
இந்தத் தேர்தலில் ரஜினி தேர்தல் ஆணையத்தின் மவுத் பீசாக மாறி இருக்கிறார். அதற்குக் காரணம் கடந்த 5 ஆண்டுகளாக ரஜினியின் கொள்கையை பாஜக கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான்.
இன்று காலை வாக்களிப்பதற்காக சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு வந்தார் ரஜினிகாந்த். ஆனால் அங்கே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது. இயந்திர கோளாறு காரணமாக ரஜினி உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் விரைவாக வாக்களித்து விட்டு, அடையாள மை தடவிய விரலை காட்டிவிட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். அப்போது ரசிகர்கள் கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
2019இல் கூட வாக்களிப்பதற்கு முன் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக பேசினார். அப்போது அவரை பாஜகவின் நிழல் என்றும் பாஜகவின் மறுபக்கம் என்றும் சிலர் விமர்சித்தனர்.
அதற்கு ஏற்ப அவர் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் கருத்துகளை வெளியிட்டார். ஓட்டுப் போடுவதற்கு முன்புகூட வாஜ்பாய், பாஜக தேர்தல் அறிக்கை என்று மறைமுகமாக சில சிக்னல்களைக் கொடுத்தார்.
ஆனால், இந்த 2024 மக்களவைத் தேர்தலுக்காக வாக்களிக்க வந்த ரஜினி, கப்சிப் என்று சென்றுள்ளார். கூடவே வாக்களியுங்கள், அதுவே பெருமை என்கிறார்.
ரஜினியையும் வாக்குச்சாவடி சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது. அந்தச் சர்ச்சை இந்த முறை இல்லை. மவுனம் தான் ரஜினியின் பதிலாக இருந்துள்ளது.
பல ஆண்டுகள் முன்பு ஒருமுறை அவர் வாக்களித்த போது இரட்டை இலைக்கு வாக்களித்தேன் என்று வெளிப்படையாக சொன்னார். அது சர்ச்சையானது.
அதைக்கூட சமீபத்தில் நடத்த 'கலைஞர் 100' விழாவில் ஒரு குட்டிக் கதைப் போல சொன்னார் ரஜினி.
தனது படத்தினை கலைஞருக்கு போட்டுக் காட்ட முயன்றபோது தான் சொன்ன இரட்டை இலை விவகாரம் மன வருத்தத்தை தரும் என்று நினைத்து படக் காட்சிக்கு வராமல் குளிர் காய்ச்சல் என்று பொய் சொன்னதாகவும், அதற்கு கலைஞர், 'சூரியன் பக்கத்தில் இருந்தால் காய்ச்சல் சரியாகிவிடும்' என்று கிண்டலாக சொன்னதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
இதைப்போல 2022 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவர் வாக்களிக்க வருவாரா? மாட்டாரா? என்று பெரிய விவாதமே நடந்தது. அதைவிட இன்னொரு விநோதமான ஒரு சம்பவம் நடந்தது.
நடிகர் சங்கத் தேர்தலின் போது ரஜினிகாந்துக்கே ஓட்டு இல்லை. அதற்கு கமல்ஹாசன் கூட விளக்கம் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications