2025ல் மொத்தம் 4 கிரகணங்கள்.. ஆனால் இந்தியாவில் ஒன்றுதான் தெரியும்! காரணம் இதுதான்
சென்னை: நாளை மறுநாள் பிறக்க உள்ள 2025ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் தெரிய உள்ளன. ஆனால் இதில் ஒரே ஒரு கிரகணம்தான் இந்தியாவிலிருந்து பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சூரிய, சந்திர கிரகணங்கள்: உஜ்ஜயினியில் உள்ள ஜிவாஜி வானியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் இது குறித்து கூறுகையில், "அடுத்த ஆண்டு 2 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணம் நடைபெறும். முதல் கிரகணமாக சந்திர கிரகணம் நடைபெறுகிறது. மார்ச் மாதம் 14ம் தேதியன்று இந்த கிரகணம் நடைபெறுகிறது. ஆனால் இதை இந்தியாவில் பார்க்க முடியாது. ஏனெனில் சந்திர கிரகணம் நடக்கும்போது இந்தியாவில் பகல் பொழுதாக இருக்கும்.

இந்தியா தவிர, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, மற்றும் வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரியும்.
சூரிய கிரகணம்: அதே மாதத்தில் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அதாவது மார்ச் மாதம் 29ம் தேதி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. ஆனால் இதுவும் இந்தியாவில் தெரியாது. மற்றபடி வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் வடமேற்கு ரஷ்யாவில் தெரியும்.
இந்தியாவில் எப்போது தெரியும்?: செப்டம்பர் மாதம் 7-8ம் தேதிகளில் முழு சந்திர கிரகணம் நடக்கும். இது மட்டும்தான் இந்தியாவில் தெரியும். இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் பிற நாடுகளிலும், ஐரோப்பா, அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் கிரகணம் தெரியும். சூரிய கிரகணம் நடக்கும் போது, சூரியன் மறையும். ஆனால் சந்திர கிரகணம் நடக்கும் போது சந்திரன் மறையாது. மாறாக அது சிவப்பு நிறத்தில் தெரியும். இது அக்.7ம் தேதி இரவு 8.58க்கு தொடங்கி, அடுத்த நாள் அதிகாலை 2.25 மணிவரை சந்திர கிரகணம் நடக்கும்.
ஆண்டின் இறுதி சூரிய கிரகணம்: அடுத்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் செப்.21-22ம் தேதிகளில் நடைபெறும். நியூசிலாந்து, கிழக்கு மெலனேசியா, தெற்கு பாலினேசியா மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது.
இது தவிர, ஜனவரி 3-4ம் தேதிகளில் விண்கல் மழை பொழியும். ஒரு மணி நேரத்திற்கு 80-120 விண்கற்கள் பொழியும். இதனை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் மாதம் 12-13ம் தேதிகளில் 'பெர்சீட்ஸ்' விண்கல் மழை பொழியும். இந்த சமயத்தில் ஒரு மணி நேரத்திற்கு 100 விண்கற்கள் வரை பொழியும். இறுதியாக டிசம்பர் 14-15ம் தேதிகளில் 'ஜெமினிட்ஸ்' விண்கல் மழை பொழியும். இந்த சமயத்தில் ஒரு மணி நேரத்திற்கு 150 விண்கற்கள் பூமி மீது பொழியும்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications