திசை மாறிய அசானி புயல்..! எப்போது கரையை கடக்கும்.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? முழு தகவல்
சென்னை: அசானி புயல் திடீரென திசை மாறியதால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு, வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. அந்தமான் கடல் பகுதியில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு "அசானி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

அசானி புயல்
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல் ஞாயிற்றுக்கிழமை தீவிர புயலாக வலுப்பெற்று. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்தது. இதையடுத்து மெல்ல அது மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்குச் சென்றது.

திசை மாறியது
நேற்றுவரை இந்த அசானி புயல் வடகிழக்கு திசையை நோக்கியே நகர்ந்து வந்தது. இருப்பினும், கடந்த 6 மணி நேரத்தில் இந்த புயல் திடீரென வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி புயல் பயணித்தது. இதன் காரணமாக ஆந்திரப் பிரதேச கடலோரத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் அசானி புயல் இருந்தது. இதன் காரணமாக ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கனமழையானது பெய்து வருகிறது.

கரையைக் கடக்கும்
குறிப்பாக ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் மிகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் மொத்தம் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த புயல் நாளை அதிகாலை முதலில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது சற்று தாமதமாகக் காலை 11 மணி அளவில் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் இடையே இந்த அசானி புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எப்போது வலுவிழக்கும்
இதையடுத்து ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் (கிருஷ்ணா, கிழக்கு - மேற்கு கோதாவரி) இடையே பிற்பகல் நேரத்தில் இந்த அசானி புயல் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை அடக்கும் சமயத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் 75-85 கிலோமீட்டர் வேகத்திலும், ஒடிசா கடலோரப்பகுதிகளில் 45 - 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

தமிழகத்தில் எங்கு மழை
இந்த அசானி புயல் காரணமாகத் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications