திருமாவின் முதல்வராகும் கனவு நடக்காது.. அதுவே ஒரு சின்ன கட்சி.. விசிகவை விளாசிய எல்.முருகன்
சென்னை: விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் கனவெல்லாம் நடக்காது. சமூக நீதியைப் பற்றி பேச அவருக்கு அருகதையே கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநர் ஆர்என் ரவி தனது வேலையை செய்து கொண்டிருக்கிறார். உண்மையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையை சொல்லும்போது திமுக தலைவர்களுக்கு, திமுக நிர்வாகிகளுக்கு கசப்பைக் கொடுக்கிறது. அந்த கசப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சியில் பங்கு கொடுப்பது அவர்களைச் சார்ந்தது.

சமூக நீதியைப் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அனைத்து மக்களுக்கும், சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் இட ஒதுக்கீடு என்பது செல்ல வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் எண்ணம், கொள்கையாக இருந்தது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.
அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருக்கிற திருமாவளவன் எப்படி தலித் தலைவராக இருக்க முடியும். இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தலைவராக இருக்க முடியும். அவருடையது ஒரு சிறிய கட்சி. அந்தக் கட்சியின் சிறிய அமைப்புக்கான தலைவராகத்தான் அவரை நான் பார்க்கிறேன்.
ஒட்டுமொத்த தலித் மக்களுக்கான தலைவர் என்றால் அவர் அனைத்து தலித் மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூக நீதியைப் பற்றி பேச அவருக்கு எந்தவித தகுதியும் இல்லை. அருந்ததியர் மட்டும் தலித் அல்ல. அவர்களுக்கு கீழும் பெரும்பான்மையானோர் இருக்கின்றனர்.
ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். அந்த இட ஒதுக்கீட்டையே நீர்த்துப் போகச் செய்யும் செயலை செய்கிறவர்தான் திருமாவளவன். ஆகவே, திருமாவளவன் முதலமைச்சராகும் கனவு எல்லாம் ஒருபோதும் நடக்காது.
மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எவ்வளவு ஆதரவு அளிக்கின்றனர் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல, வெற்றிவேல் யாத்திரைக்கும் ஆதரவு கொடுத்தார்கள். கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக அந்த யாத்திரை தொடங்கப்பட்டிருந்தது. அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. என் மண் என் மக்கள் யாத்திரை மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications