3 கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு.. எடப்பாடி பழனிசாமியை யாரோ பேச வைக்கிறார்கள்.. திருமாவளவன்
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பதற்குப் பின் வேறொரு திட்டம் இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவராகப் பேசவில்லை என்று கூறிய திருமாவளவன், யாரோ பேச வைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய 3 கட்சிகளிடம் இருந்தும் விசிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் திருமாவளவனை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த 4 நாட்களில் விசிகவை கூட்டணிக்கு அழைப்பு விடுத்துப் பேசத் தொடங்கினார்.

திமுக கூட்டணியில் இருந்தாலும் விசிகவுக்கு மாநாடு நடத்தவோ, கொடிக்கம்பம் நடவோ கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை விசிக தலைவர் திருமாவளவன் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கடலூரில் திமுக கூட்டணி பெறும் 4 வாக்குகளில் ஒரு வாக்கு விசிக உடையதாகவும் என்றும் திருமாவளவன் பேசி இருக்கிறார்.
ஆனால் அதிமுக தரப்பில் விசிகவுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து திருமாவளவன் பேசுகையில், கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 நாட்களாகவும் குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சியை எடப்பாடி பழனிசாமி அழைத்திருப்பது என்பது அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு செயல் திட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். யார் அவர்களுக்கு அந்த பணியைக் கொடுத்துள்ளார்கள் என்று தெரியாது. ஆனான் மக்களைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, மக்களின் கோரிக்கைகளைப் பிரச்சனைகளை பேசுவது கிடையாது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது, விமர்சிப்பது என்ற நிலையில் தான் உரைகள் இருக்கின்றன. சாதாரண மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிற்குப் பின்னுள்ள என்ன இருக்கிறது என்பது தெரியும். எடப்பாடி பழனிசாமி தானாகப் பேசவில்லை.. யாரோ பேச வைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications